நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியுடன் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்திருக்கும் சூழலில், சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் சேர்த்து சமன் செய்தது.

இதனைத் தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் அமெரிக்கா வெற்றிபெற்று புதிய வரலாறு படைத்தது. ஏற்கனவே கனடா அணியுடன் அமெரிக்கா வென்ற நிலையில், பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தியுள்ளது. இதனால் 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வென்ற அமெரிக்கா அணி 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இதனால் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் குரூப் ஏ சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளே வலிமையாக பார்க்கப்பட்டது. இதனால் அயர்லாந்து, கனடா மற்றும் அமெரிக்கா அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறும் என்று கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அமெரிக்கா அணி திடீரென விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஒருவேளை அமெரிக்கா அணி இந்திய அணியிடம் தோல்வியடைந்தாலும், அயர்லாந்து அணியை வீழ்த்தினாலே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும். அதேபோல் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வியடைந்தால், சூப்பர் 8 சுற்று கனவு மொத்தமாக முடிவுக்கு வரும். ஏற்கனவே 2007 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி அயர்லாந்து அணியிடம் தோல்வியடைந்து குரூப் சுற்றுடன் வெளியேறும்.
அதேபோல் இம்முறை டி20 உலகக்கோப்பை தொடரில் குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் அணி வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டுக்கு பின் சில கத்துக்குட்டி அணிகளிடம் பெரிய அணிகள் அடி வாங்கியதால், ஐசிசி தொடரின் வடிவம் மாற்றியமைக்கப்பட்டது. தற்போது மீண்டும் குரூப் சுற்று போட்டிகள் நடக்கும் சூழலில், மீண்டும் கத்துக்குட்டி அணிகள் எழுச்சி பெற்று வருகின்றன. இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.