ஃப்ளோரிடா : பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான அசாம் கான் 2 கிமீ தூரத்தை 20 நிமிடங்கள் ஓடி கடப்பார் என்று பாகிஸ்தான் ஜாம்பவான் முகமது ஹஃபீஸ் விமர்சித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரின் குரூப் சுற்றுடன் பாகிஸ்தான் அணி நடையை கட்டியுள்ளது. 2007 உலகக்கோப்பை தொடருக்கு பின், ஐசிசி தொடரில் பாகிஸ்தான் அணியின் மோசமான செயல்பாடு இதுதான் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தொடங்கி அனைத்து வீரர்களையும் காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரர் அசாம் கான் தொடர்பாக முன்னாள் வீரர் முகமது ஹஃபீஸ் பேசி இருக்கிறார். சுமார் 120 கிலோ எடையில் இருக்கும் அசாம் கான் குறித்து ஹஃபீஸ் பேசுகையில், பாகிஸ்தான் அணியில் அசாம் கான் தேர்வு செய்யப்பட்ட போது அவருக்கு 6 வாரங்கள் ஃபிட்னஸ் முகாமில் பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சி முடிவடைந்த போதும் அசாம் கானின் எடை, ஃபேட் லெவல் எதுவும் குறையவில்லை.
எல்லாமே அதே புள்ளிகளில் இருந்தது. பாகிஸ்தான் அணியின் மற்ற வீரர்கள் 2 கிமீ தூரத்தை 10 நிமிடங்களில் ஓடினால், அசாம் கான் மட்டும் 2 கிமீ தூரத்தை 20 நிமிடங்கள் ஓடுவார். கிரிக்கெட் வீரர்கள் ஒல்லியாக இருப்பதோ அல்லது எடை அதிகமாக இருப்பதோ பிரச்சனையில்லை. ஆனால் தேவையான ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும். நாங்கள் அசாம் கானுக்கு என்று ஒரு ஃபிட்னஸ் திட்டம் கொடுத்தோம்.
அதனை பயன்படுத்தி அவர் முன்னேறவில்லை. அவரின் திறமை காரணமாகவே பாகிஸ்தான் அணியில் இருக்கிறார். எந்த ஃபிட்னஸை பற்றியும் கவலைப்படாமல் அசாம் கானை அணிக்குள் கொண்டு வந்தோம். ஆனால் அசாம் கான் முன்னேறுவதில் நாட்டம் காட்டவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அசாம் கான் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணிக்கு ராணுவ வீரர்கள் பயிற்சி செய்யும் மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் வீரர்களின் ஆட்டம் ராணுவ மைதானங்களில் பயிற்சி செய்தது போல் தெரியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் மொத்த வீரர்களையும் நீக்கிவிட்டு புதிய அணியை கட்டமைக்க வேண்டும் என்று கருத்துகள் எழுந்துள்ளன.