கராச்சி: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி மோசமாக விளையாடி குரூப் சுற்றுடன் வெளியேறியது. இதை அடுத்து பாகிஸ்தான் அணியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அந்த அணியின் வீரர்களை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சில ரசிகர்கள் எல்லை மீறி பாகிஸ்தான் வீரர்களை நேரிலேயே சென்று அவர்களை பொது வெளியில் சந்தித்து வசை பாடி வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை அதிர வைத்துள்ளது. தற்போது பாகிஸ்தான் அணி வீரர்கள் சிலர் உலகக்கோப்பை முடிந்தும் அமெரிக்காவிலேயே தங்கி உள்ளனர். அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரௌப் அமெரிக்காவில் தனது மனைவியுடன் சாலை ஓரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஒரு பாகிஸ்தான் ரசிகர் ஹாரிஸ் உடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு ஹாரிஸ் ரௌப் மறுத்துவிட்டார். உடனடியாக அந்த ரசிகர் ஹாரிஸ் ரௌப்பை வசை பாடினார். டி20 உலகக் கோப்பையில் மோசமாக செயல்பட்டதை சுட்டி காட்டி அவரை திட்டினார். அதனால் கோபம் கொண்ட ஹாரிஸ் அவரை அடிக்கச் சென்றார்.
பின்னர் அங்கிருந்த பாதுகாவலர்கள் மற்றும் அவரது மனைவி அவரை தடுத்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை பொது வெளியில் திட்டுவது என்பது இதற்கு முன்பும் பல முறை நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அணி உலக கோப்பைகளில் சொதப்பும் போதும் பாகிஸ்தான் ரசிகர்கள் இதேபோல அத்துமீறி அந்த அணியின் வீரர்களை தனிப்பட்ட முறையில் கடுமையான வார்த்தைகளால், மனதை காயப்படுத்தி உள்ளனர்.
இதற்கு முன் 2019 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. அப்போது அந்த அணி கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மதை பார்த்து ஒரு ரசிகர், "நீங்கள் ஏன் பன்றியைப் போல குண்டாக இருக்கிறீர்கள்?" என்று கிண்டல் செய்தார்.
அடுத்து 2021 டி20 உலகக் கோப்பையில் ஹசன் அலி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஒரு கேட்ச்சை தவறவிட்டார். அதனால் அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தோல்வி அடைந்திருந்தது. அடுத்த சில நாட்கள் கழித்து ஹசன் அலி உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடிய போது, ஒரு ரசிகர் அவரை கடுமையாக திட்டி வாக்குவாதம் செய்தார்.
அதேபோல பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் பாபர் அசாம் இதுவரை எந்த உலகக் கோப்பை தொடரிலும் பாகிஸ்தான் அணியை சிறப்பாக வழி நடத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டி அவர் ஜிம்பாப்வே அணியுடன் மட்டும் தான் ரன் குவிப்பார் என்பதை குறிக்கும் வகையில், "ஜிம்பாபர்" என அழைத்து கிண்டல் செய்து வருகின்றனர்.
2007 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டி வரை சென்று இந்திய அணியிடம் தோல்வி அடைந்திருந்தது. அப்போது ஷாகித் அப்ரிடியை ஒரு ரசிகர் பொதுவெளியில் வைத்து அவமானப்படுத்தினார். அப்போது இது பெரும் சர்ச்சைமாறியது.
இப்படியாக பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் அணியின் வீரர்களை பொதுவெளியில் வைத்து அவமானப்படுத்துவதும், கேலி, கிண்டல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. விளையாட்டை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல், விமர்சனங்களை ஒரு எல்லையுடன் நிறுத்திக் கொள்ளாமல், நேரிலேயே சென்று வீரர்களை திட்டுவதும், அவர்களை மோசமான வார்த்தைகளால் பேசுவதும், மிகவும் தவறான செயல் என பாகிஸ்தானின் முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டு இது போன்ற ரசிகர்களை கண்டித்து உள்ளனர். இனியாவது இதுபோல நடந்து கொள்ளும் பாகிஸ்தான் ரசிகர்கள் மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.