நியூயார்க்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அமெரிக்க அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த வெற்றியை இந்திய ரசிகர்களை காட்டிலும், பாகிஸ்தான் அணி மற்றும் அந்த அணியின் ரசிகர்களே அதிக அளவில் கொண்டாடி வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் ஒன்று உள்ளது.
இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான், கனடா மற்றும் அயர்லாந்து ஆகிய ஐந்து அணிகளும் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன. பாகிஸ்தான் அணி தான் ஆடிய மூன்று போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இரண்டு புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. அந்த அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் பிற அணிகளின் வெற்றி, தோல்விகள் அந்த அணிக்கு சாதகமாக அமைய வேண்டும் என்ற நிலை உள்ளது.

முதலில் அமெரிக்க அணியின் நெட் ரன் ரேட் பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட்டை விட கீழே செல்ல வேண்டும். மேலும் இந்திய அணி தனது குரூப் போட்டியில் அமெரிக்க அணியை வீழ்த்த வேண்டும். இது இரண்டும் நடந்தால் முதற்கட்டமாக பாகிஸ்தான் அணிக்கு சாதகமான நிலை ஏற்படும் என்ற நிலை இருந்தது. அதற்கேற்றார் போல இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு, அமெரிக்காவின் நெட் ரன் ரேட்டும் பாகிஸ்தான் அணியின் நெட் ரன் ரேட்டை விட கீழே சரிந்தது.
தற்போது அமெரிக்க அணி மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகள் உடன் நான்கு புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்த அணியின் என் ரன் ரேட் 0.127 ஆக உள்ளது. பாகிஸ்தான் அணி இரண்டு புள்ளிகள் உடன் 0.191 என்ற நெட் ரன் ரேட்டுடன் உள்ளது.
தற்போது அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் அடுத்து அயர்லாந்து அணியுடன் ஆட உள்ளன. அந்தப் போட்டிகளில் அமெரிக்க அணி தோல்வி அடைந்து, பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றால், பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பெறும். இதன் காரணமாகவே இந்திய அணியின் வெற்றியை, பாகிஸ்தான் அணி மற்றும் அதன் ரசிகர்கள் கொண்டாடி உள்ளனர். இப்போதைக்கு பாதி கிணறை தாண்டி உள்ளது பாகிஸ்தான்.