லாகூர்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி முதல் சுற்றில் இருந்து வெளியேறி இருப்பது அந்நாட்டில் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு முன்னாள் வீரர்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை தான் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
மேலும் பாகிஸ்தான் ஊடகங்களும் அந்நாட்டு கிரிக்கெட் வீரர்களை கிழித்து தொங்க விட்டு வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கிரிக்கெட் வாரியத்தின் செயலால்தான் பாகிஸ்தான் அணியின் நிலை தற்போது மோசமாக இருப்பதாக குற்றஞ்சாட்டி உள்ளனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடந்த ஆண்டு புதிய ஒப்பந்தத்தை வீரர்களுடன் போட்டுக் கொண்டது. அதன்படி பாகிஸ்தான் வீரர்களின் ஊதியம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இதில் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட சில வீரர்களுக்கு மாதம் தோறும் இந்திய மதிப்பில் 13 லட்சம் ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது.
இதே போன்று பி விரிவில் உள்ள வீரர்களுக்கு மாதந்தோறும் 8 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் ஊதியமும், சி மற்றும் டி பிரிவில் உள்ள வீரர்களுக்கு தலா 2 லட்சத்திலிருந்து 4 லட்சம் ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. இதைத்தவிர ஒவ்வொரு போட்டியிலும் விளையாடும் வீரர்களுக்கு ஒரு லட்சம் இரண்டு லட்சம் ரூபாய் என தனி சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த சம்பள உயர்வுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி மிகவும் மோசமாக விளையாடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன்படி 2023 ஆசிய கோப்பை, 2023 உலகக்கோப்பை, டி20 உலக கோப்பை, ஆஸ்திரேலிய தொடர் மற்றும் நியூசிலாந்து தொடர் என தொடர்ந்து பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்து வருகிறது.
இதனால் கடுப்பான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது வீரர்களின் ஊதியத்தை குறைக்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி எந்த வீரர்கள் சரியாக விளையாடவில்லையோ, அவர்களின் ஊதியத்தை குறைத்து நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மோசின் நாக்வி முடிவு எடுத்திருப்பதாக அந்நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்து இருக்கிறது. மேலும் சரியாக வீரர்களை ஊதிய ஒப்பந்தத்தில் இருந்து நீக்கவும் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.