மும்பை : இந்திய அணி வீரர்களை யோ-யோ டெஸ்ட் மூலம் தேர்வு செய்யக் கூடாது என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் தேர்வு செய்யப்பட்ட அனைத்து வீரர்களும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்திய அணியுடன் பயணிக்க முடியும். இல்லையென்றால் என்சிஏவில் பயிற்சியில் ஈடுபட்டு யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற வேண்டும். அதுவரை இந்திய அணியில் அந்த வீரர் விளையாட முடியாது. விராட் கோலியின் கேப்டனாக இருக்கும் போது இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டது.

இந்திய அணிக்காக விளையாடும் வீரர்கள் ஃபிட்னஸ் உடன் இருக்கிறார்களா என்பதை அறியும் வகையில் இந்த யோ-யோ நடத்தப்பட்டு வருகிறது. அம்பாதி ராயுடு, சர்பராஸ் கான் உள்ளிட்ட வீரர்கள் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெறாததால், சில தொடர்களில் விளையாட முடியாமல் தவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஃபிட்னஸ் உடன் இருக்க வேண்டும். ஆனால் ஃபிட்னஸ் டெஸ்டில் தேர்ச்சி பெற்றால் தான் ஃபிட்னஸ் உடன் இருக்கிறார்கள் என்பதை ஏற்க தேவையில்லை. ஏனென்றால் சில வீரர்கள் உடல்ரீதியாக பலம் வாய்ந்தவர்களாக இருப்பார்கள். சில வீரர்களால் உடற்பயிற்சி கூடத்தில் சிறப்பாக செயல்பட முடியும். அதேபோல் சில வீரர்களால் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட முடியாது.
என்னை பொறுத்தவரை யோ-யோ டெஸ்ட் மூலம் அல்லாமல், ஒரு பயிற்சியாளர் அல்லது ட்ரெய்னர் மூலமாக அந்த வீரர் ஃபிட்டாக இருக்கிறாரா, இல்லையா என்று தெரிந்து கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை பெஞ்ச் மார்க் என்பதே தேவையில்லை. என்னால் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி பெற முடியும். ஆனால் உடற்பயிற்சி கூடத்தில் அதிக எடையை தூக்க முடியாது.
அதற்காக நான் உடல்ரீதியாக பலம் வாய்ந்தனல்ல என்று பொருள் கிடையாது. அதில் அந்த வீரர் சிறப்பாக செயல்பட ட்ரெய்னர் உதவி செய்ய வேண்டும். அதனால் யோ-யோ டெஸ்ட் மூலமாக வீரர்களை தேர்வு செய்வது சரியென்று நினைக்கவில்லை. கிரிக்கெட் வீரர்களை பேட்டிங், பவுலிங், திறமையை வைத்து தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.