மும்பை : 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர்கள் 20-30 ரன்கள் அடித்தாலும் அதனை ரசிகர்கள் பாராட்டும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்திருக்கிறார்.
இந்திய வீரர்கள் ஒவ்வொரு போட்டியிலும் அரை சதம், சதம் அடிக்க வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கிரிக்கெட்டின் சூழல் தற்போது வேகமாக மாறி வருகிறது. இப்போதெல்லாம் அரை சதமோ சதமோ அடிப்பது பிரச்சனை இல்லை.

எத்தனை பந்துகளில் நீங்கள் சதம் அடிக்கிறீர்கள் என்பதுதான் தற்போது அனைவரின் கேள்விகளுமாக இருக்கிறது. இந்த சூழலில் இந்திய வீரர்கள் பலரும் அரை சதம் இல்லை ,பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பத்தில் சில பந்துகளை வீணடித்து விட்டு பின் அதிரடி காட்டும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.
இதனால் பெரிய ஸ்கோர் எடுக்க முடியாத நிலை இந்தியாவுக்கு ஏற்படுகிறது. இந்த நிலையில் ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் கூட்டணியில் இந்தியா புதிய யுத்தியை கையாண்டு வருகிறது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டி 20, 30 ரன்கள் எடுத்தால் கூட அதை குறைவான பந்துகளில் எடுக்க வேண்டும் என்ற ஃபார்முலாவை பயன்படுத்தி வருகிறது.
இதற்கு ஏற்றார் போல் ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் குறைந்த பந்துகளில் அதிரடியாக ஆடும் பழக்கத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இதனை குறிப்பிட்டுள்ள அஸ்வின் இந்திய ரசிகர்கள் நமது பேட்ஸ்மேன்கள் 30 ரன்கள் இல்லை, 20 ரன்கள் அடித்து விட்டு விக்கெட்டுகளை இழக்கும் பழக்கத்திற்கு தங்களை மாற்றிக் கொள்ளவில்லை.
ஆனால் டி20 கிரிக்கெட் விளையாட இப்படித்தான் ரன்கள் குவிக்க வேண்டும். இந்த நடைமுறையை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக முதலில் பேட்டிங் செய்யும்போது ஒவ்வொரு வீரர்களும் அதிரடியாக விளையாடும் முறையை பின்பற்ற வேண்டும். இதனை இந்திய வீரர்கள் சிறப்பாக செய்து வருவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார்.