பிரிட்ஜ்டவுன்: 2019 டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. இந்த வெற்றிக்கு பின் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் தங்களின் ஓய்வை அறிவித்தனர். அதே சமயம் இதுவே பயிற்சியாளராக ராகுல் டிராவிடின் கடைசி போட்டியாகவும் அமைந்தது. தனது கடைசி போட்டியில் பயிற்சியாளராக உலகக் கோப்பை வென்றது குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டார் ராகுல் டிராவிட்.
கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல் டிராவிட், தனது பணியின் முடிவில் இந்திய அணிக்கு உலகக்கோப்பை வென்று கொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து ராகுல் டிராவிட் பேசுகையில் இந்திய அணியின் எதிர்காலம் குறித்தும், தன்னால் ஒரு வீரராக உலக கோப்பை வெல்ல முடியாமல் போனது குறித்தும் மனம் திறந்தார்.

"இந்திய கிரிக்கெட் அணியில் அற்புதமான திறமை கொண்ட வீரர்கள் உள்ளனர். அவர்களின் ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை இந்த முறை வேறு ஒரு அளவில் இருந்தது. வரும் காலத்தில், இன்னும் ஐந்து - ஆறு ஆண்டுகளில் இந்திய அணி இன்னும் பல கோப்பைகளை வெல்லும். இது இரண்டு ஆண்டு பயணம். நாங்கள் எது போன்ற திறமையாளர்களை தேர்வு செய்ய வேண்டும், எது போன்ற வீரர்கள் எங்களுக்கு வேண்டும் என்பதை சிந்தித்து இந்த அணியை கட்டமைத்தோம். 2021 ஆம் ஆண்டு நான் பயிற்சியாளராக பதவி ஏற்றது முதலே இது குறித்து நாங்கள் விவாதித்தோம். இந்த உலகக் கோப்பைக்கான பணி மட்டுமே அல்ல. இது இரண்டு ஆண்டு பயணம்" என்றார் ராகுல் டிராவிட்.
அடுத்து தன்னால் ஒரு வீரராக உலகக் கோப்பை வெல்ல முடியாதது குறித்து பகிர்ந்து கொண்டார். "ஒரு வீரராக உலகக் கோப்பை வெல்ல எனக்கு அதிர்ஷ்டம் இல்லை. ஆனால், நான் எனது சிறந்த ஆட்டத்தை கொடுத்திருந்தேன். ஆனால், ஒரு அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அது எனது அதிர்ஷ்டம். இந்த வீரர்களால் நான் உலகக் கோப்பை வெல்ல முடிந்தது எனது அதிர்ஷ்டம். இது மிகச்சிறந்த உணர்வாக உள்ளது. நான் இழப்பை சரி செய்து கொள்வதற்காக குறிவைத்து இந்த உலகக் கோப்பையை வென்றதாக சொல்ல முடியாது. இது எனது பணியில் ஒரு பகுதி. அதை மட்டுமே நான் செய்தேன். இது அற்புதமான பயணமாக இருந்தது" என்றார் ராகுல் டிராவிட்.