மும்பை: 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ தரப்பில் ரூ.125 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், தேர்வு குழுவினர், ரிசர்வ் வீரர்கள் என்று அத்தனை தரப்பினருக்கும் பரிசுத்தொகை பிரித்து அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் ரூ.125 கோடி பரிசுத்தொகையில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்ட 15 வீரர்களுக்கும் தலா ரூ.5 கோடி அளிக்கப்படும் என்றும், தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கும் ரூ.5 கோடி அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. மீதமுள்ள பயிற்சியாளர்களான பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் பயிற்சியாளர்களுக்கு ரூ.2.5 கோடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் உதவியாளர்கள், பிசியோதெரபிஸ்ட், ட்ரெயினர்கள் என்று அனைவருக்கும் தலா ரூ.2 கோடியும், தேர்வுக் குழுவினருக்கு தலா ரூ.1 கோடியும், ரிசர்வ் வீரர்களாக பயணித்த 4 பேருக்கும் தலா ரூ.1 கோடியும் அளிக்கப்படவுள்ளது தெரிய வந்தது. இதனிடையே தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ரூ.5 கோடி பரிசுத்தொகை தனக்கு வேண்டாம் என்று நிராகரித்துள்ளார்.
மற்ற பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்படும் ரூ.2.5 கோடி பரிசுத்தொகையே போதுமானது என்று தெரிவித்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி தரப்பில் பேசுகையில், விக்ரம் ரத்தோர், பராஸ் ஆம்ரே, டி திலீப் ஆகியோருக்கு அளிக்கப்பட்ட பரிசுத்தொகைக்கு தனக்கும் போதுமானது என்று ராகுல் டிராவிட் தெரிவித்தார். அவரின் செண்ட்மெண்டை மதிக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலமாக தானாக முன் வந்து ராகுல் டிராவிட் பரிசுத்தொகையை வேண்டாம் என்று நிராகரித்துள்ளது தெரிய வந்துள்ளது. அதேபோல் கொடுத்தால் அனைவருக்கும் சமமாக கொடுங்கம் என்று ராகுல் டிராவிட் மறைமுகமாக பிசிசிஐ-க்கு அறிவுறுத்தியுள்ளார். 2018ஆம் ஆண்டு யு19 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி பிரித்வி ஷா தலைமையில் கைப்பற்றியது.
அந்த இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் இருந்தார். அப்போதும் இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு ரூ.20 லட்சமும், ராகுல் டிராவிட்டுக்கு மட்டும் ரூ.50 லட்சமும் பிசிசிஐ தரப்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. அப்போது ராகுல் டிராவிட் நிராகரிக்க, அவர் உட்பட பயிற்சியாளர்கள் குழுவினர் அனைவருக்கும் ரூ.25 லட்சம் பரிசுத்தொகை சமமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.