மும்பை: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய அணியின் மூத்த வீரர் விராட் கோலிக்கு சூசகமாக ஒரு விஷயத்தை கூறி இருக்கிறார். விராட் கோலி செய்ய வேண்டிய வேலை ஒன்று மீதம் இருப்பதாக சுட்டி காட்டினார். இதுவரை வெள்ளை பந்துகளில் விளையாடப்படும் ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளின் அனைத்து முக்கிய கோப்பைகளையும் விராட் கோலி கைப்பற்றி இருக்கிறார். ஆனால், சிவப்பு பந்தில் மட்டும் அவர் இன்னும் ஒரு முக்கிய கோப்பையை கைப்பற்றவில்லை என்பதை சுட்டி காட்டினார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி உலகக் கோப்பை வென்றது. இது இந்திய அணியின் இரண்டாவது டி20 உலக கோப்பை வெற்றியாகும் இதன்மூலம், விராட் கோலி 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை எனும் மூன்று முக்கிய வெள்ளைப் பந்துகளில் விளையாடப்படும் உலக அளவிலான தொடர்களில் வெற்றிகளை வென்றுள்ளார். இது அரிய சாதனையாகும். இந்த நிலையில் அவர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வையும் அறிவித்து இருக்கிறார்.

மறுபுறம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உலகக் கோப்பை தொடருடன் விடை பெறுவதாக முன்பே அறிவித்து இருந்தார். அவர் இந்திய அணியை விட்டு விலக உள்ளார். இந்த நிலையில் உலககோப்பை வெற்றிக்கு பின் அவர் இந்திய அணி வீரர்களுடன் அறையில் இருந்தார். அப்போது விராட் கோலிக்கு அனைவரும் வாழ்த்துக்களை கூறி வந்தனர். அப்போது அவரை தட்டிக் கொடுத்த ராகுல் டிராவிட், "மூன்று வெள்ளையை முடித்தாகிவிட்டது. இன்னும் ஒரு சிவப்பு மட்டுமே மீதம் உள்ளது. அதையும் செய்ய வேண்டும்" என்றார்.
அதாவது, வெள்ளை பந்துகளில் ஆடப்படும் கிரிக்கெட் போட்டிகளில் மூன்று முக்கிய கோப்பைகளான ஒருநாள் போட்டி உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டி20 உலகக் கோப்பையை விராட் கோலி வென்று விட்டார். இன்னும் சிவப்பு பந்தில் விளையாடப்படும் டெஸ்ட் போட்டிகளின் முக்கிய கோப்பையான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையையும் அவர் கைப்பற்ற வேண்டும் என்றார் ராகுல் டிராவிட்.
இதற்கு முன் இந்திய அணி 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களின் இறுதிப்போட்டி வரை முன்னேறியது. ஆனால், அதில் முறையே நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வி அடைந்தது. அடுத்து 2025 ஆம் ஆண்டில் மீண்டும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும். அதில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதோடு, அதில் கோப்பையை கைப்பற்ற வேண்டும். அதன் மூலம் விராட் கோலி தனது கிரிக்கெட் வாழ்வில் அனைத்து உலகக்கோப்பைகளையும் வென்ற வீரராக இருப்பார்.