பிரிட்ஜ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்ற பின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், வீரர்கள் அறையில் பேசும்போது, ரோஹித் சர்மா செய்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி என கூறி இருந்தார். அது என்ன தொலைபேசி அழைப்பு? அது உலகக்கோப்பை வெல்ல எத்தனை முக்கியமானது? என்பதை சூர்யகுமார் யாதவ் பின்னர் ஒரு வீடியோவில் பேசுகையில் விவரித்தார்.
ராகுல் டிராவிட் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ரோஹித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இணைந்து இந்திய அணியின் அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெறும் உலகக்கோப்பைகளை வெல்ல திட்டமிட்டனர். எனினும், 2022 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரை இறுதியுடன் வெளியேறியது. அடுத்து 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.

அடுத்து மூன்றாவது முயற்சியாக 2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பையை வெல்ல களமிறங்கியது இந்திய அணி. இந்தியாவில் நடைபெற்ற அந்த தொடரில் இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்தித்தது. ஆனால், ஆஸ்திரேலிய அணி, இந்தியாவை வீழ்த்தி உலகக் கோப்பை வென்றது.
அத்துடன் ராகுல் டிராவிட் இந்திய அணியை விட்டு விடை பெற முடிவு செய்தார். அவரது ஒப்பந்தமும் அத்துடன் முடிவுக்கு வந்ததால் அவர் விலக முடிவு செய்தார். ஆனால், அடுத்த எட்டு மாதங்களில் 2024 டி20 உலகக் கோப்பை நடைபெற இருந்தது. மிகக் குறுகிய காலத்தில் அடுத்த உலக கோப்பை தொடர் நடைபெற இருந்ததால், வேறு ஒரு புதிய பயிற்சியாளரை நியமித்து குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என நினைத்த பிசிசிஐ ராகுல் டிராவிட்-இடம் 2024 டி20 உலக கோப்பை வரை பணியாற்றுமாறு அழைத்தது.
அது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் முதலில் ராகுல் டிராவிட் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் கேப்டன் ரோஹித் சர்மா, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ராகுல் டிராவிடை தொலைபேசியில் அழைத்து பேசி இருக்கிறார். 2024 டி20 உலகக் கோப்பை வரை இந்தியா அணியின் பயிற்சியாளர் பதவியில் தொடருமாறு அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். கேப்டனே தன்னை அழைத்து பேசியதால் மனம் மாறிய ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பை வரை பணியாற்ற ஒப்புக்கொண்டார். அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா இணைந்து டி20 உலக கோப்பைக்கான அணியை தேர்வு செய்தனர். அந்த அணி உலகக் கோப்பையையும் வென்று இருக்கிறது. ராகுல் டிராவிட் தனது கிரிக்கெட் வாழ்வில் இதுவரை ஒரு முறை கூட உலகக் கோப்பை வென்றதில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு கிரிக்கெட் வீரராக உலகக் கோப்பை வெல்லாத நிலையில், பயிற்சியாளராக டி20 உலகக் கோப்பை வென்று இருக்கிறார்.
அது அவரது கிரிக்கெட் வாழ்வின் உச்சகட்ட சாதனையாக அமைந்தது. அந்த வாய்ப்பு அவருக்கு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தது ரோஹித் சர்மா செய்த அந்த ஒரு தொலைபேசி அழைப்பு தான். அன்று ரோஹித் சர்மா அவரை அழைத்து பேசியிருக்காவிட்டால் ராகுல் டிராவிட் அப்போதே இந்திய அணியை விட்டு விலகி இருப்பார். அதற்காகத்தான் அவர் ரோஹித் சர்மாவுக்கு நன்றி கூறி இருக்கிறார்.
இது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசுகையில், "ராகுல் டிராவிட் கடைசியாக பேசும் போது, "ரோஹித், நவம்பரில் நீங்கள் செய்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி" என்று கூறினார். ஏனெனில், ஒரு நாள் போட்டி உலக கோப்பைக்கு பின் ராகுல் டிராவிட் இந்திய அணியை விட்டு விலக நினைத்தார். ஆனால், ரோஹித் மற்றும் ஜெய் ஷா அவரை சமாதானம் செய்து பயிற்சியாளராக தொடர வைத்தனர்" என்றார்.