மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட் 2024 டி20 உலக கோப்பையுடன் விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பிசிசிஐ சமீபத்தில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விளம்பரம் கொடுக்க உள்ளதாக கூறியிருந்தது
அப்போது ராகுல் டிராவிட்டுக்கு வாய்ப்பு அளிக்கப்படுமா என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா பதில அளிக்கையில், "விருப்பம் இருந்தால் ராகுல் டிராவிட்டும் பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் விண்ணப்பம் அளிக்கலாம்" என கூறியிருந்தார். இந்திய அணியின் பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட்.

அவரது தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருந்தது. அதே போல 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரையும் இந்திய அணி முன்னேறி இருந்தது. இந்திய அணி உலகக்கோப்பை வெல்லாதது மட்டுமே ராகுல் டிராவிட்டுக்கு பாதகமான அம்சமாக உள்ளது.
அவரது தலைமையில் தான் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்த நிலையில் அவர் இந்த உலகக் கோப்பை தொடருடன் பயிற்சியாளர் பணியில் இருந்து விலக விரும்புவதாக கூறப்படுகிறது. பயிற்சியாளர் பதவிக்கு மீண்டும் ராகுல் டிராவிட் விண்ணப்பம் செய்ய மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட உள்ளது உறுதியாகி இருக்கிறது. 2024 டி20 உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார். கவுதம் கம்பீர் இந்திய அணி பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என சிலர் கூறி வருகின்றனர். அவர் தற்போது ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருக்கிறார். எனவே, அவர் இந்த ஆண்டு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் செய்ய வாய்ப்பு குறைவு.