பார்படாஸ்: இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்படாதது ஏன் என்ற கேள்விக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் அளித்துள்ளார். குடும்பத்தினருடன் நேரம் செலவிட ராகுல் டிராவிட் விரும்புவதால், அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்து வந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கடைசி போட்டியில் இந்திய அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்று கொடுத்து ராகுல் டிராவிட் விடைபெற்றுள்ளார்.

கடைசி போட்டியில் பயிற்சியாளராக செயல்பட்ட ராகுல் டிராவிட்டுக்கு இந்திய அணி வீரர்கள் மறக்க முடியாத ஃபேர்வெல்லை கொடுத்துள்ளனர். 11 ஆண்டுகளுக்கு பின் ராகுல் டிராவிட் ஐசிசி கோப்பையை இந்திய அணிக்காக வென்று கொடுத்துள்ளார். இதனால் ராகுல் டிராவிட் பதவிக்காலம் நீட்டிக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், குடும்பத்திடன் இருக்க வேண்டும் என்று ராகுல் டிராவிட் கேட்டுக் கொண்டார். இதன் காரணமாகவே அவர் பயிற்சியாளராக தொடர வேண்டும் என்று பிசிசிஐ தரப்பில் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. கடந்த 5.5 ஆண்டுகளாக இந்திய அணியில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ராகுல் டிராவிட் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளார். முதல் 3 ஆண்டுகளில் என்சிஏ தலைவராக இருந்து இளம் வீரர்களை தயார் செய்தார்.
அதன்பின் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்தார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக ராகுல் டிராவிட் இருந்துள்ளார். அதேபோல் தலைமைப் பயிற்சியாளராக இருந்து இந்திய அணியை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கும் அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அடைந்த தோல்வி காரணமாக, சில முடிக்கப்படாத பணிகளை டி20 உலகக்கோப்பை மூலம் முடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இலங்கை தொடரின் போது இந்திய அணி புதிய பயிற்சியாளருடன் பயணம் மேற்கொள்ளும். அதனால் ஜிம்பாப்வே டி20 தொடரில் இந்திய அணி விவிஎஸ் லக்ஷ்மண் பயிற்சியின் கீழ் விளையாடும். பயிற்சியாளருக்கான நேர்காணல் முடிவடைந்துவிட்டது என்று கூறியுள்ளார். இதனால் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.