நியூயார்க்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி மோசமாக பேட்டிங் ஆடி பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக செயல்பட்டதாக ரமீஸ் ராஜா சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்து முடிந்து மூன்று நாட்கள் ஆன நிலையிலும் பாகிஸ்தான் அணி குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

இந்தப் போட்டியில் இந்திய அணி மிக மோசமாக பேட்டிங் ஆடியது. 20 ஓவர்கள் கூட தாக்குப் பிடிக்காத இந்திய அணி 19 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி இந்த சிறிய இலக்கை கூட சேஸிங் செய்ய முடியாமல் 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜா அதிரடியான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக விளையாடியதாக அவர் கூறியிருக்கிறார். அதாவது இந்திய அணி பாகிஸ்தான அணிக்கு நன்மை செய்யும் வகையில் மோசமாக பேட்டிங் ஆடியதாகவும் மாவீரர்களைப் போல அதிரடி ஷாட் ஆட முயன்று தங்கள் விக்கெட்டை தூக்கி எறிந்ததாகவும் கூறினார். அப்படி இருந்தும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது ஏன் என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இது குறித்து ரமீஸ் ராஜா பேசுகையில், "இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக இருக்கும் வகையில் மிக மோசமாக பேட்டிங் ஆடியது. அவர்கள் மாவீரர்களைப் போல ஆடினார்கள். இல்லையெனில் அவர்கள் எளிதாக 140 அல்லது 150 ரன்கள் எடுத்திருப்பார்கள். அது பாகிஸ்தான் அணியால் எட்ட முடியாத விஷயமாக இருந்து இருக்கும். இந்திய வீரர்கள் தவறான ஷாட்களை ஆடினார்கள். அதேசமயம் சிறப்பாக வந்து வீசினார்கள். பாகிஸ்தான அணி நிச்சயமாக அந்த போட்டியில் வெற்றி பெற்று இருக்க முடியும்" என்றார் ரமீஸ் ராஜா.
மேலும், முகமது ரிஸ்வான் பும்ராவின் பந்து வீச்சில் தேவையில்லாமல் புல் ஷாட் அடிக்க முயன்று தனது விக்கெட்டை பறிகொடுத்தது பற்றி பேசினார். "ரிஸ்வான் தான் பாகிஸ்தான் அணியில் கடைசியாக நின்ற பேட்ஸ்மேன். 120 ரன்களை சேஸிங் செய்யும் போது, ஒரு விசித்திரமான பிட்ச்சில், ஒரு சிறந்த பந்து வீச்சுக்கு எதிராக ஆடும் போது, ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப் மட்டுமே வேண்டும். அதை செய்யாதது என்னை மிகவும் எரிச்சல் அடைய வைக்கிறது. எந்த விதமான ஹீரோயிஸமும் தேவையில்லை. ஃபோர் அல்லது சிக்ஸ் எதுவும் தேவையில்லை. ஒரு ஓவருக்கு ஆறு ரன்கள் எடுத்தாலே போதுமானது. அதை ஏன் நீங்கள் தவறவிட்டீர்கள்? இது அனைத்துமே உங்கள் மனப்பான்மையை பொறுத்ததே ஆகும்." என்றார் ரமீஸ் ராஜா.