கிங்ஸ்டவுன்: வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று 2024 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளது. இந்த சந்தோஷமான தருணத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் செய்த மோசமான செயல் குறித்த வீடியோ ஒன்று சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் போது ஆப்கானிஸ்தான் அணி மிக நிதானமாக பேட்டிங் ஆடியது. பிட்ச் மிகவும் மந்தமாக இருந்ததால் அந்த அணியின் பேட்ஸ்மேன்களால் விரைவாக ரன் சேர்க்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி 17.4 ஓவர்களுக்கு 93 ரன்கள் எடுத்து 5 வீக்கங்களை இழந்து இருந்தது. அப்போது களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் ரஷித் கான் அதே ஓவரின் கடைசி பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார்.

அடுத்த ஓவரில் களத்தில் இருந்த ரஷித் கான் மற்றும் கரீம் ஜனத்தால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அடுத்து 20-வது ஓவரில் அதிரடியாக ஆட வேண்டும் என்று முடிவில் இருந்த ரஷித் கான் இரண்டாவது பந்தில் ஒரு சிக்ஸ் அடித்தார். மூன்றாவது பந்திலும் சிக்ஸ் அடிக்க முயன்றார், ஆனால், பந்து நீண்ட தூரம் சென்று கீழே விழுந்தது. இதனிடையே ரஷித் கான் இரண்டு ரன் ஓடி மீண்டும் ஸ்ட்ரைக்கை தக்க வைக்க முயன்றார்.
ஆனால், கரீம் ஜனத் ஒரு ரன் ஓடியதோடு நின்று விட்டார். ரஷித் கான் இரண்டாவது ரன்னை கிட்டத்தட்ட ஓடி முடித்த நிலையில் கரீம் மறுபுறம் நின்றபடியே இருந்தார். அதை பார்த்து கடும் கோபம் கொண்ட ரஷித் கான் பேட்டை அவர் மீது எறிந்தார். பேட் அவர் மீது படவில்லை. பின்னர், ரஷீத் கான் தனது இடத்துக்கே திரும்ப ஓடி வந்தார். அதனால் அந்த பந்தில் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது.
அப்போது ரஷித் கான் வீசிய பேட்டை எடுத்துக்கொண்டு அவர் அருகே வந்த கரீம் ஏன் ரன் ஓடவில்லை என விளக்கம் அளிக்க முயன்றார். ஆனால், ரஷித் கான் எதையும் கேட்கும் மனநிலையில் இல்லை. அவரை பார்த்து கோபமாக சில வார்த்தைகள் பேசிவிட்டு சென்றார். பின்னர் அந்த ஓவரின் கடைசி பந்தில் ரஷித் கான் மேலும் ஒரு சிக்ஸ் அடித்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 115 ரன்கள் சேர்த்தது. இந்த போட்டியில் வங்கதேசம் 105 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. போட்டியில் வெற்றி பெற்ற போதும் ரஷித் கான் சக வீரர் மீது பேட்டை எறிந்தது தவறு என ரசிகர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.