மும்பை : 2024 டி20 உலக கோப்பை தொடருக்கு ரவிச்சந்திரன் அஸ்வினை தேர்வு செய்ய வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக அவர் ஐபிஎல் தொடரின் நாக் அவுட் போட்டிகளில் எல்லாம் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி வருகின்றனர்.
எனவே, அவர் முக்கிய போட்டிகளில் கடும் அழுத்தத்துக்கு நடுவே சிறப்பாக செயல்படக்கூடிய சுழற் பந்துவீச்சாளர் எனவும், அவரை உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வு செய்ய வேண்டும் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்திய அணி கடைசியாக 2007 டி20 உலக கோப்பை வென்று இருந்தது. அதன் பின் ஒரு முறை கூட இந்திய அணியால் டி20 உலகக்கோப்பை வெல்ல முடியவில்லை. இந்த நிலையில் தான் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வினை சேர்க்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரின் பிளே ஆஃப் சுற்றில், எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக அவர் நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் அவர் வென்றார்.
இது மட்டும் இன்றி 2010 ஐபிஎல் தொடரின் அரை இறுதியில் 4 ஓவர்களில் 14 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். அதே ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் 4 ஓவர்களில் 24 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார். 2011 ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இந்த சிறப்பான செயல்பாடுகளை சுட்டிக்காட்டி அவர் அழுத்தமான நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட கூடிய சுழற் பந்துவீச்சாளர் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். தற்போது 2024 டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இந்திய டி20 அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் ஆல் - ரவுண்டரான அக்சர் பட்டேலை அணியிலிருந்து நீக்கிவிட்டு, அவருக்கு பதிலாக அஸ்வினை சேர்க்க வேண்டும் என கூறி வருகின்றனர்.
இந்த கோரிக்கை சமூக வலை தளங்களில் பரவி வரும் நிலையில் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு இது தலைவலியாக மாறி உள்ளது. 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பைக்கு முன்பும் அஸ்வினை இந்திய ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன. அப்போது அவர் உலகக்கோப்பை அணியில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போன்ற நிலை இப்போதும் வருமா?