துபாய்: நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனை அமீலியா கேரை இந்திய அணியின் ஹர்மன்ப்ரீத் கவுர் ரன் அவுட் செய்த நிலையில், நடுவர் அவுட் கொடுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரன் அவுட்டானதை ஏற்று அமீலியா கேர் களத்தில் இருந்து வெளியேறிய போதும், நடுவர்கள் அவரை மீண்டும் அழைத்து பேட்டிங் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகளிருக்கான ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சோஃபி டெவின் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் டெவின் 36 பந்துகளில் பவுண்டரிகள் உட்பட 57 ரன்களை விளாசினார்.

இந்திய அணி தரப்பில் ரேணுகா சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த போட்டியில் தீப்தி சர்மா வீசிய 14வது ஓவரில் சோஃபி டெவின் - அமீலியா கேர் கூட்டணி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அந்த ஓவரின் கடைசி பந்தில் அமீலியா கேர் லாங் ஆஃப் திசையில் அடித்துவிட்டு விரைவாக ரன்களை ஓடினார். ஒரு ரன் ஓடி முடித்த பின், ஹர்மன்ப்ரீத் கவுர் கைகளில் பந்து இருந்தது.
தொடர்ந்து அமீலியா கேர் 2வது ரன்னை எடுப்பதற்காக ஓட, ஹர்மன்ப்ரீத் கவுர் நேராக விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் கைகளில் த்ரோ செய்தார். அதனை தாவி பிடித்த ரிச்சா கோஷ், உடனடியாக ரன் அவுட் செய்து அசத்தினார். அமீலியா கே ரன் அவுட்டானதை ஏற்றுக் கொண்டு களத்தில் இருந்து பெவிலியனை நோக்கி நடந்தார். இதனால் இந்திய வீராங்கனைகள் உற்சாகமடைந்தனர்.
ஆனால் களத்தில் இருந்த நடுவர்கள், முதல் ரன் ஓடி முடித்த பின் ”ஓவர்” முடிந்ததாக அறிவித்தது தெரிய வந்தது. ஓவர் முடிந்ததாக அறிவித்த பின் நியூசிலாந்து வீராங்கனைகள் 2வது ரன்னிற்கு முயற்சி செய்துள்ளனர். இதனால் நியூசிலாந்து வீராங்கனைகளுக்கு தண்டனை கொடுக்காமல், நடுவர்கள் இருவரும் அமீலியா கேரை மீண்டும் பேட்டிங் செய்ய அழைத்தனர்.
இதனால் கடுப்பான கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் உடனடியாக நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதேபோல் பயிற்சியாளர் அமோல் மஜும்தாரும் 4வது நடுவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இந்திய வீராங்கனைகள் எந்த தவறும் செய்யாத போது, அவுட் கொடுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில், 2வது ரன்னிற்கு முன்பாகவே ஓவர் என்று நடுவர்கள் கூறியுள்ளனர். இது யாரின் தவறு என்று கொந்தளித்துள்ளார்.