பார்படோஸ்: இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த சுழற் பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவின் இடத்தை பிடிக்க மூன்று பந்து வீச்சாளர்கள் போட்டி போட்டு வருகின்றனர். சுமார் பத்து ஆண்டு காலத்திற்கும் மேலாக இந்திய அணியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் ரவீந்திர ஜடேஜா. ஆல் ரவுண்டராக பேட்டிங்கிலும் அணிக்கு கை கொடுப்பார் என்பதாலும், ஸ்பின் எடுபடாத ஆடுகளங்களிலும் ரன் கொடுக்காமல் பந்து வீசும் ஆற்றல் கொண்டவர் என்பதாலேயே அவர் இத்தனை ஆண்டுகாலம் இந்திய அணியில் இடம் பெற்று வருகிறார்.
டெஸ்ட் போட்டி அணி மட்டுமின்றி, ஒரு நாள் போட்டி அணி மற்றும் டி20 போட்டி அணிகளிலும் அவர் தவிர்க்க முடியாத வீரராக இருக்கிறார். அதற்கு அவரது ஃபீல்டிங் ஒரு முக்கியமான காரணமாகும். ரவிச்சந்திரன் அஸ்வின் சிறந்த ஸ்பின்னர் ஆக இருந்தபோதும் அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே இடம்பெற்று வருகிறார். அதற்கு காரணம், அவரது ஃபீல்டிங் தான்.

இந்த நிலையில், ரவீந்திர ஜடேஜாவால் இந்திய அணியில் நிலையான வாய்ப்பு இன்றி தவித்து வரும் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் அவரது இடத்துக்கு குறி வைத்துள்ளனர். அந்த மூன்று பேர் - அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல். சில ஆண்டுகளுக்கு முன்பு ரவீந்திர ஜடேஜாவை முந்தி சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் இந்திய ஒரு நாள் மற்றும் டி20 அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தனர்.
ஆனால், இடையே இருவரும் அவ்வப்போது ஃபார்ம் அவுட் ஆனார்கள். அந்த இடைவெளியை பயன்படுத்திக் கொண்ட ரவீந்திர ஜடேஜா அணியில் மீண்டும் தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டார். இதனிடையே ஜடேஜாவுக்கு இணையான ஆல் ரவுண்டராக கருதப்படும் அக்சர் பட்டேலும் இந்திய அணியில் வருவதும், போதுமாக இருந்தார்.
அவர் பேட்டிங்கிலும் அணிக்கு கொடுப்பார் என்ற போதும் ரவீந்திர ஜடேஜாவை தாண்டி அவரால் அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் ஜடேஜாவை ஓரங்கட்டி அக்சர் பட்டேல் முத்திரை பதித்து இருக்கிறார். உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் இந்திய அணி ஆடிய 3 போட்டிகளிலும் அக்சர் பட்டேலுக்கு அதிக ஓவர்கள் அளித்தார் கேப்டன் ரோஹித் சர்மா. அவர் விக்கெட்களும் வீழ்த்தினார்.
மேலும், இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நான்காம் வரிசையில் களம் இறங்கி கடினமான பிட்ச்சில் 20 ரன்கள் சேர்த்தார். அந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு அவரும் முக்கிய காரணமாக இருந்தார். அதே சமயம் ஜடேஜாவுக்கு குரூப் சுற்றில் மொத்தமே மூன்று ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு அளித்தார் ரோஹித் சர்மா. ஜடேஜா பேட்டிங்கிலும் ஒரு ரன் கூட எடுக்கவில்லை.
இதை அடுத்து ஜடேஜாவுக்கு இந்திய அணியில் இனி வாய்ப்புகள் குறையும் என்றும், அவர் அணியை விட்டு நீக்கப்படுவார் என்றும் தகவல் பரவி வருகிறது. தற்போது சூப்பர் 8 சுற்றில் குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் பிளேயிங் லெவனில் இடம் பெறுவார்கள் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் சூப்பர் 8 சுற்றிலேயே ஜடேஜா இந்திய அணியின் பிளேயிங் லெவனிலிருந்து கேப்டன் ரோஹித் அவரை வெளியேற்ற வாய்ப்புள்ளது.