பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்று நாளை முதல் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் என நான்கு அணிகள் ஒரு பிரிவிலும் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் இன்னொரு பிரிவிலும் இடம்பெற்றிருக்கின்றன.
இந்திய அணிக்கு மிகவும் எளிமையான ஒரு வழி கிடைத்திருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் வீழ்த்தினால் இந்திய அணி அரை இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அதிகரித்துக் கொள்ளும்.

இந்த நிலையில் சூப்பர் 8 சுற்று முழுவதும் வெஸ்ட் இண்டீஸில் தான் நடைபெறுகிறது என்பதால் பேட்ஸ்மேன்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால் இந்த ஆடுகளம் ஓரளவுக்கு பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஜடேஜா செய்தியாளரை சந்தித்துள்ளார்.
அப்போது ஜடேஜா சொன்ன ஒரு விஷயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருக்கிறது. இதுகுறித்து பேசிய அவர் வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நாங்கள் எப்போது விளையாடினாலும் ஆடுகளம் ஒரே மாதிரியாக தான் இருக்கும். இங்கு ஆடுகளம் காய்ந்த நிலையிலும் கொஞ்சம் மெதுவாகவும் இருக்கும். மேலும் போட்டி வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை நேரத்தில் தான் தொடங்குகிறது.
இதன் மூலம் சுழற் பந்துவீச்சாளர்கள் நல்ல பயனை பெற முடியும். இந்தியாவில் கூட சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற வகையில் தான் ஆடுகளம் இருக்கும். எனவே டி20 போட்டிகளில் நடு ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் நிச்சயம் இருக்கும். அது மட்டுமல்லாமல் சூப்பர் 8 சுற்று போட்டிகளில் கடைசி கட்டத்தில் கேப்டன்கள் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்று ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இதனால் இந்திய அணி மூன்று அல்லது நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதை தொடர்ந்து பேசிய நட்சத்திர சுழற் பந்துவீச்சாளர் குல்திப் யாதவ் கடந்த ஆண்டு தாங்கள் இங்கு விளையாடிய போது சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் வழங்கப்பட்டதாகவும், தற்போது அதேபோல்தான் டி20 உலக கோப்பையிலும் இருக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.