ஆன்டிகுமா : இந்திய அணியில் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள சுப்மன் கில், ஆவேஷ் கான் நாடு திரும்பும் சூழலில், ரிங்கு சிங் மற்றும் கலீல் அஹ்மத் இருவரும் இந்திய அணியுடன் பயணிக்க உள்ளனர்.
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய இந்திய அணி, தனது கடைசி லீக் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இதன்பின் இந்திய அணி வீரர்கள் அனைவரும் சூப்பர் 8 சுற்றில் பங்கேற்க வெஸ்ட் இண்டீஸ் பயணிக்க உள்ளனர்.

இதனிடையே இந்திய அணி நிர்வாகம் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியுடன், 4 பேர் ரிசர்வ் வீரர்களாக பயணித்தனர். ரிங்கு சிங், சுப்மன் கில், ஆவேஷ் கான் மற்றும் கலீல் அஹ்மத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இந்திய அணியுடன் அனுப்பப்பட்டனர். தற்போது ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் உள்ள சுப்மன் கில், ஆவேஷ் கான் இருவரும் நாடு திரும்பவுள்ளது தெரிய வந்துள்ளது.
கனடா அணிக்கு எதிரான லீக் போட்டி முடிவடைந்த பின், அமெரிக்காவில் இருந்து சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் இந்தியாவுக்கு புறப்படவுள்ளனர். தொடக்கத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் முழுக்கவே ரிசர்வ் வீரர்களை பயணிக்க வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது இந்திய அணி நிர்வாகம் 2 வீரர்களை விடுவிக்க முடிவு எடுத்துள்ளது.
சுப்மன் கில் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் நாடு திரும்பும் நிலையில், ரிங்கு சிங் மற்றும் கலீல் அஹ்மத் இருவரும் இந்திய அணியுடன் பயணிப்பதற்கான காரணம் ரசிகர்களிடையே ஆவலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் ஆகியோர் மாற்று வீரர்களாக பெஞ்சில் உள்ளனர்.
இருப்பினும் ரிங்கு சிங் இந்திய அணியுடன் பயணிக்கவுள்ளார். இதனால் சூப்பர் 8 சுற்றில் நிச்சயம் ட்விஸ்ட் இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2019 உலகக்கோப்பையில் விஜய் சங்கர் உள்ளிட்ட வீரர்கள் காயமடைந்த போது ரிஷப் பண்ட் திடீரென களமிறக்கப்பட்டார். இதனால் சூப்பர் 8 சுற்றில் சிவம் துபே கொஞ்சம் சொதப்பினாலும் நிச்சயம் காயம் என்று வெளியேற்றப்பட்டு, ரிங்கு சிங் உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.