தரம்சாலா : இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஆட தரம்சாலாவில் முகாமிட்டு இருக்கிறது. திடீரென அவர்களுடன் ரிங்கு சிங் காணப்பட்டார். அது மட்டுமின்றி இந்திய அணி வீரர்கள் சேர்ந்து புகைப்படம் எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில் ரிங்கு சிங்கும் கலந்து கொண்டார். டெஸ்ட் அணியுடன் ரிங்கு சிங்கிற்கு என்ன வேலை? என்ற கேள்வி எழுந்தது. அதன் பின்னணி குறித்து தற்போது தெரிய வந்துள்ளது.
2024 டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக அந்த தொடருக்கான விளம்பர படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்திய டி20 அணியில் இடம் பெற்று, 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க வாய்ப்புள்ள வீரர்களை மட்டும் வைத்து அந்த விளம்பர படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை. ரோஹித் சர்மா அம்பானி திருமண முன்னோட்ட விழாவிற்கு சென்று இருக்கிறார். விராட் கோலி லண்டனில் ஓய்வில் இருக்கிறார். அவர்கள் இல்லாத நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள டி20 அணி வீரர்களான பும்ரா, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், குல்தீப் யாதவ் ஆகியோரைக் கொண்டு அந்த விளம்பரப் படப்பிடிப்பு நடந்துள்ளது. அவர்களுடன் யாராவது ஒரு முக்கிய வீரர் இருந்தால் சரியாக இருக்கும் என படப்பிடிப்புக் குழு கருதிய நிலையில் பிசிசிஐ, ரிங்கு சிங்கை அழைத்து அதில் கலந்து கொள்ள செய்துள்ளது.
இதன் மூலம் ரிங்கு சிங் டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடப் போவது உறுதி என்ற தகவல் பரவி வருகிறது. மற்ற இளம் வீரர்கள் எல்லாம் டி20 அணியில் இடம் பெற்று 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் ஆடி விட வேண்டும் என போராடி வரும் நிலையில் ரிங்கு சிங் அணியை அறிவிக்கும் முன்பே அணியில் தன் இடத்தை உறுதி செய்து இருக்கிறார். இது டி20 அணியில் இடம் பிடிக்க போராடி வரும் வீரர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.