மும்பை : டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் மாற்று வீரராக இடம் பெற்று இருக்கும் ரிங்கு சிங், தனது கிரிக்கெட் வாழ்வில் அடைய வேண்டிய பெரிய ஆசை என்ன என்பது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். அதற்காக கடுமையாக உழைத்து வருவதாக கூறி இருக்கிறார்.
கடந்த 2023 ஐபிஎல் தொடரில் ஒரே ஓவரில் 5 சிக்ஸ் அடித்து கிரிக்கெட் உலகில் புகழ்பெற்றார் ரிங்கு சிங். அதன்பின் அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்பட்டது. சர்வதேச டி20 போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்து வந்தார். ஒருநாள் அணியிலும் கூட இடம் பிடித்தார். எனினும் 2024 ஐபிஎல் தொடரில் அவரால் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.

எனினும், அவரது ஐபிஎல் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் கோப்பை வென்றுள்ளது. அதனால் உற்சாகத்தில் இருக்கிறார் ரிங்கு சிங். இந்த நிலையில் அவரிடம் ஐபிஎல் தொடரில் ஏன் சரியாக பேட்டிங் செய்யவில்லை? என்பது குறித்தும், இந்திய அணியில் அவர் எந்த இடத்தை அடைய விரும்புகிறார் என்பது குறித்தும் கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரிங்கு சிங், "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நான் பேட்டிங் வரிசையில் கீழே தான் பேட்டிங் செய்தேன். அணிக்கு எது நல்லதோ அதை செய்ய வேண்டும் என முடிவு செய்து நான் இவ்வாறு பேட்டிங் இறங்கினேன். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எனக்கு பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும், என்னால் அணிக்காக சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதுதான் உண்மை. நான் சரியாக பேட்டிங் ஆடினேனா, இல்லையா? என்பது முக்கியமில்லை. அணியின் நலனுக்காக பேட்டிங் ஆர்டரில் கீழே இறங்கினேன். பேட்ஸ்மேன்களைப் பொறுத்தவரை எப்போதும் பேட்டிங் செய்ய முடியும்" என்றார்.
மேலும், "நான் எப்போது பேட்டி இறங்கினாலும், போட்டியின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவேன். அணியின் தேவை என்னவோ அதை கருத்தில் கொண்டு பேட்டிங் செய்வேன். நான் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட விரும்புகிறேன். சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. நான் விரைவில் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்து வருகிறேன். கிரிக்கெட்டிலே மிகப்பெரிய விஷயம் டெஸ்ட் கிரிக்கெட் தான். டி20யில் யார் வேண்டுமானாலும் விளையாடலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அனைவருக்கும் விளையாட வாய்ப்பு கிடைக்காது. எனது குறிக்கோள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வேண்டும் என்பதுதான்" என்றார் ரிங்கு சிங்.