பிரிட்ஜ்டவுன்: இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் உலகக் கோப்பையில் வென்ற பதக்கத்துடன் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த பதிவின் கீழ் அக்சர் பட்டேல் மற்றும் முகமது சிராஜ், "எங்களுக்கும் அதே போல தான் இருக்கிறது" என பதிவிட்டிருந்தனர். அந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா கோப்பை வென்றது. அதன் முடிவில் தொடரை நடத்திய சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் இந்திய அணிக்கு உலகக் கோப்பை அளிக்கப்பட்டது. அத்துடன் ஒவ்வொரு இந்திய வீரருக்கும் பதக்கம் அணிவிக்கப்பட்டது. அந்த பதக்கத்துடன் தான் ரிஷப் பண்ட் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார்.

அந்த புகைப்படத்தின் கீழ், "இந்த பதக்கம் என் மீது அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என கூறி இருந்தார். மேலும், அவர் அந்த பதக்கத்தை அணிந்து கொண்டும், அதை வாயில் வைத்துக் கொண்டும், கையில் எடுத்து காண்பித்துக் கொண்டும் புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருந்தார். அதன் மூலம், அந்த பதக்கத்தை தான் அறையில் அடிக்கடி அணிந்து கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதிவின் கீழ் அக்சர் பட்டேல், "தனக்கும் அதே போலத்தான் நடக்கிறது" என கூறியிருந்தார். முகமது சிராஜும் அதன் கீழ் "தனக்கும் அதே போலத்தான் இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இந்திய வீரர்கள் தங்கள் அறையில் இருக்கும் போதும் அந்த பதக்கத்தை அணிந்து கொண்டே இருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
தற்போது உலக கோப்பை இறுதி போட்டி முடிந்துவிட்டாலும் இந்திய வீரர்கள் மூன்று நாட்களாக பார்படோஸ்-இலேயே தங்கி உள்ளானர். பார்போடோஸ் நாட்டில் கடுமையான புயல் அடித்ததால் விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனால், மூன்று நாட்கள் கூடுதலாக அங்கே தங்கி இருந்தனர். தற்போது புயல் ஓய்ந்து விட்ட நிலையில் இந்திய வீரர்களுக்கு என தனி ஏர் இந்தியா விமானம் இந்தியாவில் இருந்து சென்றுள்ளது.
அதில் இந்திய வீரர்கள் கிளம்பி வரவுள்ளனர். நியூ டெல்லி வரும் இந்திய அணி, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளது. அதன் பின் மும்பை செல்லும் இந்திய அணி, மும்பை விமான நிலையத்திலிருந்து வான்கடே மைதானம் வரை திறந்த வெளி பேருந்தில் வெற்றி ஊர்வலம் வரவுள்ளது. பின்னர் வான்கடேவில் இந்திய வீரர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.