நியூயார்க் : ரிஷப் பண்ட் இந்திய டி20 அணியின் வருங்கால கேப்டன் ஆக நேரம் கைகூடி வந்துள்ளது. இரண்டு விஷயங்கள் நடந்தால் அவர் நிச்சயம் இந்திய டி20 அணியின் கேப்டனாக மாறிவிடுவார்.
தற்போது நடைபெற உள்ள 2024 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் துருப்புச் சீட்டு பேட்ஸ்மேன் யார்? என்று பார்த்தால் அது ரிஷப் பண்ட் தான். கேப்டன் ரோஹித் சர்மா சரியான ஃபார்ம்-இல் இல்லை. விராட் கோலி அதிக ரன் குவிப்பார் என்றாலும், அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடுவாரா? என்பது கேள்விக்குறிதான்.

அடுத்து ஆல் - ரவுண்டர்களன சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் அணியில் இடம் பெற்றாலும் கூட அவர்கள் இருவரும் ஒன்று பேட்டிங் அல்லது பவுலிங்கில் சரியாக செயல்பட வாய்ப்பு குறைவு. ஐபிஎல் தொடரிலேயே இருவரும் சொதப்பினர்.
ஆனால் ரிஷப் பண்ட் மட்டுமே ஐபிஎல் தொடரிலும் உலகக் கோப்பைக்கு முன் நடந்த பயிற்சி போட்டியிலும் பேட்டிங் விக்கெட் கீப்பிங் மற்றும் கேப்டனுக்கு ஆலோசனை சொல்வது என ஆல் - ரவுண்டராக பட்டையை கிளப்பினார். ஐபிஎல் தொடரில் கேப்டனாகவும் ரிஸ்க் எடுத்து செயல்பட்டார்.
இது போன்ற ஒரு வீரர் தான் உலகக் கோப்பையை வென்று கொடுக்க முடியும். இந்த நிலையில் இந்த ஆண்டு டி20 உலக கோப்பை வெல்ல ரிஷப் பண்ட் உதவ வேண்டும். யுவராஜ் சிங் எப்படி 2007 டி20 உலக கோப்பை மற்றும் 2011 ஒருநாள் போட்டி உலக கோப்பைகளில் சில முக்கிய போட்டிகளை வெல்ல காரணமாக இருந்தாரோ, அதேபோல பண்ட் முக்கிய போட்டிகளில் வெற்றி தேடி தர வேண்டும். இது முதல் விஷயம்.
அடுத்து இரண்டாவது, கவுதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட வேண்டும். டி20 உலகக் கோப்பை முடிந்தவுடன் அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக வர அதிக வாய்ப்புள்ளது. அது மட்டும் நடந்தால் நிச்சயம் ரிஷப் பண்ட் தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருப்பார்.
கவுதம் கம்பீர் டெல்லியை சேர்ந்தவர். ரிஷப் பண்ட்டும் டெல்லியை சேர்ந்தவர். கவுதம் கம்பீர் ஆடுகளத்தில் வீரர்கள் ஆக்ரோஷமாக செயல்பட வேண்டும், வெற்றியின் நோக்கி வேகமாக முன்னேற வேண்டும் என நினைக்கக் கூடியவர். அதே போன்ற அதிரடி மனநிலையை கொண்டவர்தான் ரிஷப் பண்ட். அது மட்டுமின்றி இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கவுதம் கம்பீர் ரிஷப் பண்ட்டை இந்திய அணியின் கேப்டனாக ஆக்க வாய்ப்பு உள்ளது. டி20 உலகக்கோப்பையில் ரிஷப் பண்ட்டின் செயல்பாடுகள் கேப்டன் பதவியை கைப்பற்ற உதவும்.