மும்பை : இந்திய அணியில் தோனிக்கு பின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெயரைப் பெற்றார் ரிஷப் பண்ட். ஒவ்வொரு போட்டியிலும் ரன் குவிக்கவில்லை என்றாலும் முக்கிய போட்டிகளில் தனி ஆளாக போட்டியை மாற்றும் திறன் கொண்ட வீரராக இருந்தார்.
அதனால் டி20 அணி மற்றும் டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் முக்கிய வீரராக இருந்தார். ஆனால், 2022 இறுதியில் அவருக்கு காலில் மோசமான காயம் ஏற்பட்டது. அதற்காக பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது அவர் உடற்பயிற்சி மூலம் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தன்னை தயார் செய்து வருகிறார்.

இதற்கிடையே டி20 அணியில் ஜிதேஷ் சர்மா, இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இடம் பெற்று தங்களை நிரூபித்து இருந்தனர். அடுத்து 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில் அதில் ரிஷப் பண்ட் இடம் பெறுவது கடினம் என் கூறப்படுகிறது. அவர் ஐபிஎல் தொடரில் அதிக அளவில் ரன் குவித்தால் கூட அவர் உடற்தகுதியை காரணம் காட்டி அவரை டி20 அணியில் பிசிசிஐ தேர்வு செய்யாது என கூறப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் டி20 போட்டிகளுக்கான முக்கியத்துவம் குறையும் என்பதால் ரிஷப் பண்ட்டின் டி20 எதிர்காலம் கேள்விக் குறியாகி இருக்கிறது. ஆனால், டெஸ்ட் அணி விக்கெட் கீப்பர் என்ற இடத்தை ரிஷப் பண்ட்டை தாண்டி யாராலும் நிரப்ப முடியாது என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஸ்ரீகர் பாரத் அதற்கும் முடிவு கட்டப் போகிறார்.
தற்போது இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் அவர் சதம் அடித்து இருக்கிறார். 165 பந்துகளில் 116 ரன்கள் குவித்து ரிஷப் பண்ட்டுக்கு போட்டியாக தன்னை அறிவித்து இருக்கிறார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இவரே விக்கெட் கீப்பராக செயல்படுவார் என கூறப்படும் நிலையில், அந்த தொடரில் சில சதங்களை பாரத் அடித்தால் அணியில் இருந்து அவரை நீக்குவது கடினமாகி விடும். எனவே, ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் அணி வாய்ப்பும் பறிபோகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.