நியூயார்க் : இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் ஹர்திக் பாண்டியா தான் என கூறப்பட்டு வரும் நிலையில் அவருக்கு போட்டியாக மாறி இருக்கிறார் ரிஷப் பண்ட். 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டபோது அதில் ரோஹித் சர்மா கேப்டன் ஆகவும் ஹர்திக் பாண்டியா துணை கேப்டன் ஆகவும் அறிவிக்கப்பட்டனர்.
அப்போதே சிலர் ரிஷப் பண்ட்டை துணை கேப்டனாக அறிவிக்க வேண்டும் என கூறினார்கள். அதற்கு காரணம் அவர் சில தொடர்களில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி இருக்கிறார். அது மட்டும் இன்றி அவரது கேப்டன்சி தோனியைப் போன்றே உள்ளுணர்வை சார்ந்து இருக்கும். தோனியை பின்பற்றுபவர் என்பதால் ரிஷப் பண்ட்டை துணை கேப்டனாக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது நடந்த சில சம்பவங்கள் ரிஷப் பண்ட் தான் இந்திய அணியின் வருங்கால கேப்டன் என்பதை சொல்லாமல் சொல்லியது. இந்த போட்டியின் போது ரிவ்யூ கேட்பது மட்டுமின்றி, ஃபீல்டிங் நிறுத்துவது, பந்துவீச்சாளர்கள் என்ன திட்டத்தை பயன்படுத்த வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளை கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு அளித்த வண்ணம் இருந்தார் ரிஷப் பண்ட்.
துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா, ரோஹித் சர்மா அருகில் கூட செல்லவில்லை. இந்த காட்சிகளை பார்த்தபோது ரிஷப் பண்ட் தான் இந்திய அணியன் அறிவிக்கப்படாத துணை கேப்டன் என்பது போல இருந்தது. அது மட்டுமின்றி இந்திய அணியின் கேப்டனாக வரக் கூடியவர்கள் இந்திய ரசிகர்களின் ஆதரவை பெற்று இருக்க வேண்டும்.
கடந்த 15 ஆண்டுகளில் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற இந்திய ரசிகர்களின் பேராதரவை பெற்ற வீரர்கள் மட்டுமே இந்திய அணியின் கேப்டனாக இருந்துள்ளனர். அந்த வகையில் பார்த்தால் ஹர்திக் பாண்டியாவை விட ரிஷப் பண்ட்டிற்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக உள்ளது.
அவர் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங் செய்ய களம் இறங்கிய போதும், பின்னர் அவர் அரை சதம் அடித்து வெளியேறிய போதும் ரசிகர்கள் பெரிய அளவில் ஆரவாரம் செய்தனர். எனவே அவருக்கு ரசிகர்களின் ஆதரவும் உள்ளது. ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் ஆகும் கனவிற்கு ரிஷப் பண்ட் பெரிய முட்டுக்கட்டையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.