நியூயார்க் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முக்கிய பேட்ஸ்மேனுமான ரிஷப் பண்ட் அணியில் தனது சக போட்டியாளரான சஞ்சு சாம்சன் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். இருவருக்கும் இடையே அணியில் இடம் பெற வேண்டி மறைமுக போட்டி, மனக் கசப்பு இருப்பதாக சமூக ஊடகங்களில் அவர்களின் ரசிகர்கள் விவாதித்து வரும் நிலையில் ரிஷப் பண்ட் அது குறித்து பேசி இருக்கிறார்.
இந்திய டி20 அணியில் நீண்ட நாட்கள் கழித்து இடம் பிடித்துள்ளார் சஞ்சு சாம்சன். சுமார் 11 ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறுவதும், பின்னர் நீக்கப்படுவதுமாக இருக்கிறது அவரது கிரிக்கெட் வாழ்வு. இந்த நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் அவருக்கு கிடைத்த வாய்ப்பு அவரது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் முக்கியமானதாகும். இதுவரை அவர் எந்த ஒரு உலகக்கோப்பை அணியிலும் இடம் பெற்றதில்லை.

அவர் சிறந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் என்றாலும் கூட உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்டை தாண்டி அவரால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற முடியவில்லை. ரிஷப் பண்ட் உச்சகட்ட ஃபார்மில் இருப்பதால் அவர் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெற்று இருக்கிறார்.
இந்த நிலையில் சமூக ஊடகங்களில் சஞ்சு சாம்சன் குறித்தும், ரிஷப் பண்ட் குறித்தும் பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். இந்திய அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனை புறக்கணித்து விட்டதாகவும், அதற்கு ரிஷப் பண்ட் தான் காரணம் என்பது போலவும் சஞ்சு சாம்சனின் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் விரோதத்துடன் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சஞ்சு சாம்சன் குறித்து ஒரு பேட்டியில் பேசிய ரிஷப் பண்ட், "எங்கள் இருவருக்கும் இடையில் நல்ல நட்பு உள்ளது. சஞ்சு எப்போதும் அமைதியான மனநிலையில் இருப்பார். சமூக ஊடகங்களில் எங்களைப் பற்றி நிறைய விஷயங்களை பேசுகிறார்கள் என்று தெரியும். ஆனால், தனிப்பட்ட முறையில் நாங்கள் அதில் கவனம் செலுத்துவதில்லை. நாங்கள் ஒரே அணியில் இடம் பெற்றுள்ள சக வீரர்கள். எங்கள் இருவருக்கும் இடையே நல்ல மரியாதை உள்ளது." என்றார்.