மும்பை : 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்யக் கூடாது என கேப்டன் ரோஹித் சர்மா அணித் தேர்வின் போது கூறியதாகவும், அதை தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
எனினும், பிசிசிஐ கொடுத்த அழுத்தத்தால் வேறு வழியின்றி ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் தேர்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 2024 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டு வருகிறார். பந்து வீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாத அவர், பேட்டிங்கில் மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கிறார். அவரது மோசமான பேட்டிங் காரணமாகவே அவரது தலைமையில் செயல்பட்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணி பல போட்டிகளில் தோல்வி அடைந்தது.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கியதற்கு ஹர்திக் பாண்டியாவும் ஒரு காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய டி20 அணியில் ஹர்திக் பாண்டியாவை தேர்வு செய்ய வேண்டாம் என ரோஹித் சர்மா அணித் தேர்வின் போது கூறியதாக சொல்லப்படுகிறது.
ஆனால், பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர், ஹர்திக் பாண்டியாவை சேர்த்தே ஆக வேண்டும் எனக் கூறி இருக்கிறார். அதற்கு காரணம் ஒன்றையும் அவர் கூறி இருக்கிறார். அதாவது ரோஹித் சர்மாவுக்கு வயதாகி விட்ட நிலையில் 2024 டி20 உலக கோப்பைக்கு பின் இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டனை தயார் செய்ய வேண்டிய நிலை இருப்பதை அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இந்திய அணிக்கு அடுத்த கேப்டனை இப்போதே வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முறையில் ஹர்திக் பாண்டியாவை இந்திய அணியில் சேர்த்தே ஆக வேண்டும் என அவர் கூறியதாகவும், அதன் காரணமாகவே ஹர்திக் பாண்டியாவை டி20 உலக கோப்பை அணியில் சேர்த்தது மட்டுமின்றி, அவரை துணை கேப்டன் ஆகவும் அறிவித்தது பிசிசிஐ. எதிர்காலத்தில் இந்திய டி20 அணி மட்டுமின்றி ஒருநாள் அணிக்கும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக வர வாய்ப்பு உள்ளது. இந்த தகவல் தற்போது டைனிக் ஜாக்ரான் என்ற வட இந்திய ஊடகத்தில் வெளியாகி உள்ளது.