மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி தற்போது தங்களுடைய முதல் ஆட்டத்திற்கு தயாராகி வருகிறது. இந்த தொடர் இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கிரிக்கெட் வீரராக இருந்த ராகுல் டிராவிட் இதுவரை எந்த உலகக்கோப்பையும் வெல்லவில்லை.
ஆனால் பயிற்சியாளராக இருந்தபோது இந்திய அண்டர் 19 அணி உலக கோப்பையை வெல்ல உதவினார். இதனை அடுத்து ராகுல் டிராவிட் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்திய அணியின் பயிற்சியாளராக பதவி ஏற்றார். ராகுல் டிராவிட் தலைமையில் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, உலகக்கோப்பை இறுதிப்போட்டி, டி20 உலக கோப்பை அரை இறுதி சுற்று, ஆசிய கோப்பையில் வெற்றி என சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் ராகுல் டிராவிட் தன்னுடைய பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்த நிலையில் அந்த பொறுப்பில் இருந்து விலக இருக்கிறார். தற்போது மீண்டும் பயிற்சியாளர் பதவிக்கு நேர்காணல் நடைபெற உள்ள நிலையில் ராகுல் டிராவிட் அதில் விண்ணப்பிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் தங்களுக்கு பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தார்.இது குறித்து பேசிய அவர் என்னுடைய முதல் சர்வதேச கேப்டன் என்றால் அது ராகுல் டிராவிட் தான்.
என்னுடைய முதல் போட்டியில் அவர்தான் கேப்டனாக இருந்தார். என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல். அவர் கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணிக்கு பல விஷயங்களை செய்திருக்கிறார். நான் தனிப்பட்ட முறையில் ராகுல் டிராவிட் சந்தித்து பயிற்சியாளராக இருங்கள் என்று கூறினேன். குறைந்தபட்சம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்காவது பயிற்சியாளராக இருக்க வற்புறுத்தினேன்.
என்னால் அவர் அணியை விட்டு செல்வதை பார்க்க முடியவில்லை என்று ரோகித் சர்மா மிகவும் உருக்கமாக கூறினார். இதுக்கு பதில் அளித்த ராகுல் டிராவிட் ,இந்த பணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவதை மகிழ்ச்சியாக செய்கின்றேன். ஆனால் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையும் பார்க்க வேண்டி இருக்கிறது.தற்போது உள்ள சூழலில் நான் மீண்டும் இந்த பணிக்கு விண்ணப்பிக்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.