மும்பை: தனக்கு உலக கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில் கேப்டன் ரோஹித் சர்மா தன்னை எவ்வாறு சமாதானப்படுத்தினார் என ரிங்கு சிங் ஒரு பேட்டியில் விவரித்து இருக்கிறார். உனக்கு இன்னும் வயது இருக்கிறது, இன்னும் நிறைய உலகக் கோப்பை தொடர்களில் உன்னால் ஆட முடியும் என ரோஹித் சர்மா தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பை அணியில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதற்கு முந்தைய ஆண்டு முழுவதும் அவர் இந்திய டி20 அணியில் இடம் பிடித்து ஆடி இருந்தார். மிக சிறப்பாக தனது ஃபினிஷர் பணியை அவர் செய்து வந்தார். இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடம் கிடைத்து விட்டதாகவே முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் நினைத்தனர்.

எனினும், 2024 ஐபிஎல் தொடரில் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை, அவர் ஃபார்ம் அவுட் ஆகி விட்டதாக விமர்சனம் எழுந்தது. இந்த நிலையில், 2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணித் தேர்வு நடைபெற்றது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் இடம் மறுக்கப்பட்டது.
அவர் 15 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியில் இடம் பெறவில்லை. மாறாக ரிசர்வ் வீரராக மட்டுமே பயணம் செய்தார். இந்த நிலையில், அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படாதது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா அவரை சமாதானம் செய்ததாக தற்போது ரிங்கு சிங் கூறி இருக்கிறார். இது குறித்து ரிங்கு சிங் பேசியதாவது -
"என்னை உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யாதது குறித்து ரோஹித் என்னிடம் பேசி புரிய வைத்தார். உனக்கு இன்னும் வயது இருக்கிறது. இன்னும் இளமையுடன் இருக்கிறாய். எதிர்காலத்தில் இன்னும் நிறைய உலக கோப்பைகளை உன்னால் ஆட முடியும். எனவே, இது குறித்து யோசித்து ஏமாற்றம் அடையாமல் கடினமாக உழைத்து, அடுத்த உலகக்கோப்பைகளை குறி வைத்து செயல்பாடு என்றார்." இவ்வாறு ரிங்கு சிங் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.