டெல்லி: டி20 உலகக்கோப்பை தொடரை வென்று சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய அணி, பார்படாஸில் இருந்து நாடு திரும்பியுள்ளது. பிசிசிஐ தரப்பில் ஏற்பாடு செய்த தனி விமானத்தில் வந்த இந்திய வீரர்கள், டெல்லி விமான நிலையத்தில் காலை 7 மணியளவில் தரையிறங்கினர். இதன்பின் வெளியில் வந்த இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி டி20 உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் ஆனந்த கண்ணீருடன் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர். இதன்பின் உடனடியாக திரும்ப இந்திய அணி வீரர்கள் தயாராகினர்.

ஆனால் பார்படாஸில் ஏற்பட்ட புயல் காரணமாக கூடுதலாக 2 நாட்கள் ஹோட்டலிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பின் பிசிசிஐ சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட தனி விமானத்தில் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் குழு, நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் என்று அனைவௌம் இன்று காலை 7 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கினர்.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளியில் வந்த இந்திய அணிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ரோகித் சர்மா டி20 உலகக்கோப்பையை ரசிகர்களுக்கு கைகளை உயர்த்தி காட்டினார். அதன்பின் பேருந்தில் ஏறி, இந்திய அணி வீரர்கள் ஹோட்டலுக்கு புறப்பட்டனர். அப்போது ரசிகர் ஒருவர், ரோகித் சர்மாவிடம் கோப்பையை காட்டுங்கள் என்று கேட்க, உடனடியாக ஹிட்மேன் கோப்பையுடன் போஸ் கொடுத்தார்.
அதன்பின் டெல்லி ஐடிசி ஹோட்டலுக்கு சென்ற இந்திய அணிக்கு மாஸ் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஹோட்டலின் வாயிலில் மேள தாளங்கள் அடிக்கப்பட்டன. இதனால் உற்சாகமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியா இருவரும் டான்ஸ் ஆடியபடி என்ட்ரி கொடுத்தனர். அவருடன் சூர்யகுமாரும் இணைந்து கொண்டார். ரோகித் சர்மா டான்ஸ் ஆடியது அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.
அதன்பின் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி இந்திய அணி வீரர்களை வரவேற்றார். ஐடிசி ஹோட்டலில் இந்திய அணி வீரர்கள் ஓய்வெடுத்து தயாரான பின், பிரதமர் நரேந்திர மோடி அமர்ந்து காலை உணவு அருந்தவுள்ளனர். தொடர்ந்து வாழ்த்து பெற்றபின், இந்திய அணி வீரர்கள் உடனடியாக மும்பை வரவுள்ளனர். அங்கு திறந்தவெளி பேருந்தில் 2கிமீ தூரத்திற்கு வெற்றிப்பேரணி நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.