T20 World Cup 2024 : நம்பர் 3ல் இடதுகை பேட்ஸ்மேன்.. தோனியின் ஐடியாவை ஃபாலோ செய்யும் ரோகித் சர்மா!
நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் நம்பர் 3 வரிசையில் இடதுகை பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட்-ஐ களமிறக்கியதற்கு தோனி காரணம் என்று பார்க்கப்படுகிறது.
டி20 உலகக்கோப்பை தொடரின் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி எளிதாக வென்றாலும், கேப்டன் ரோகித் சர்மா - விராட் கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கியது, ரிஷப் பண்ட் நம்பர் 3 வரிசையில் களமிறங்கியது என்று அனைத்தும் புதிய முடிவுகளாக இருந்தன.

ஏனென்றால் இந்திய அணி எப்போதும் புதிய முயற்சிகளை ஐசிசி தொடர்களில் மேற்கொள்ளாது. ஐசிசி தொடருக்கு முன்பாகவே அத்தனை புதிய முயற்சிகளையும், பரிசோதனைகளையும் செய்துவிட்டு முழு திட்டத்துடன் இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும். ஆனால் இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி முற்றிலும் வித்தியாசமாக களமிறங்கியுள்ளது.
குறிப்பாக தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருக்கும் போது, விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்குவதற்கான தேவை இல்லை என்று பார்க்கப்படுகிறது. ஆனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நம்பர் 3 வரிசையில் விளையாடிய அனுபவம் கிடையாது. இதனால் ரிஷப் பண்ட்-ஐ நம்பர் 3 வரிசையில் இந்திய அணி களமிறக்கியுள்ளது.
ஏற்கனவே டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலகின் பல்வேறு அணிகளின் நம்பர் 3 பேட்ஸ்மேன்களும் இடதுகை பேட்ஸ்மேனாகவே இருக்கின்றனர். இதற்கு ஆஃப் ஸ்பின்னர்களின் குறைவும், லெக் ஸ்பின்னர்களின் எழுச்சியுமே காரணமாக உள்ளது. லெக் ஸ்பின்னர்களை அட்டாக் செய்ய இடதுகை பேட்ஸ்மேன் களத்தில் இருந்தால், அவர்களை அட்டாக்கில் கொண்டு வருவதில் எதிரணிக்கு சிக்கல் வரும்.
சிஎஸ்கே அணி இதே பாணியில் தான் சுரேஷ் ரெய்னாவை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தது. சுரேஷ் ரெய்னா சென்ற பின் அந்த இடத்திற்கு உடனடியாக மொயின் அலியை கொண்டு வந்து கோப்பையை வென்றது. அதேபோல் சிவம் துபேவையும் தேவைக்கேற்ப பயன்படுத்தியது. கிட்டத்தட்ட ரோகித் சர்மா அப்படியே தோனியின் ஐடியாவை இந்திய அணியில் புகுத்தியுள்ளார்.
விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்களை விளாசக் கூடிய பேட்ஸ்மேன்கள். அவர்கள் ஆட்டமிழந்தால், உடனடியாக அச்சமின்றி ஆடும் ரிஷப் பண்ட்-ஐ வைத்து எதிரணியை வீழ்த்துவதே திட்டம். சேவாக்கை போல் ரிஷப் பண்ட்-ம் கொஞ்சம் கூட ஸ்பின்னர்களுக்கு மரியாதை கொடுக்க மாட்டார். இதனால் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் ரிஷப் பண்ட் நம்பர் 3ல் தொடர்ந்து வருவார் என்று பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications