நியூயார்க் : ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூயார்க் கிரிக்கெட் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளம் மிகவும் மோசமான வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக பந்து கணிக்க முடியாதபடி வருவதால் பேட்ஸ்மேன்கள் காயம் அடையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மேலும் டி20 கிரிக்கெட்டில் ரன்கள் அதிகமாக சென்றால் தான் ரசிகர்களுக்கு அது ஒரு கொண்டாட்டமாக இருக்கும். ஆனால் டெஸ்ட் போட்டிக்கு சவால் விடுவது போல் ஆடுகளம் மிகவும் மோசமான வகையில் இருப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

குறிப்பாக இந்த மைதானத்தில் இலங்கையும் தென்னாப்பிரிக்காவும் மோதிய ஆட்டத்தை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். ஆனால் இலங்கை 77 ரன்களுக்கு ஆட்டம் இழக்க அதனை தென்னாப்பிரிக்கா 16.2 ஓவர்களில் தான் எட்டியது. இதேபோன்று நேற்று இந்தியாவும் அயர்லாந்து மோதிய இந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணி 96 ரன்களில் அனைத்து விக்கெட் களையும் இழந்தது.
இதனை அடுத்து இந்திய அணி 12.2 வது ஓவரில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியின் போது பலவீரர்கள் பேட்டிங் செய்யும்போது காயம் அடைந்தனர். குறிப்பாக அயர்லாந்து வீரர் டாக்டேர், பும்ரா வீசிய பந்தை எதிர்கொள்ளும் போது முதலில் கையில் பந்து பட்டு பிறகு ஹெல்மெட்டை தாக்கியது. இதேபோன்று இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் எதிர் கொள்ளும்போது பந்து எதிர்பாராத விதமாக அவருடைய ஆர்ம்சை தாக்கியது.
இதனால் வலி தாங்க முடியாமல் ரோகித் சர்மா போட்டியிலிருந்து பாதியில் விலகினார். இந்திய அணியின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வீரராக ரோகித் சர்மா உள்ள நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டது ரசிகர்களை அதிர்ச்சடைய செய்தது. எனினும் தற்போது ரோகித் சர்மாவின் உடல் தகுதி குறித்து செய்திகள் வெளியாகியிருக்கிறது.
அதில் பந்து தாக்கியதில் லேசான காயம் தான் ரோகித் சர்மா அடைந்திருப்பதாகவும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித் சர்மா முழு உடல் தகுதியுடன் விளையாடுவார் என்றும் இந்திய கிரிக்கெட் அணி தெரிவித்திருக்கிறது. இதனால் ரோகித் சர்மா ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.