மும்பை : சர்வதேச t20 கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன் என்ற பெருமையை ரோகித் சர்மா இன்று படைக்க அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டதிலிருந்து இந்தியா ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
2023 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் செயல்பாடு பாராட்டத் தக்க வகையில் இருக்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிராக 120 ரன்கள் என்ற இலக்கை வைத்து ரோகித் சர்மா வெற்றிகரமாக தற்காத்துக் கொண்டது ரசிகர்களின் மனதை வென்றது. ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஐந்து சாம்பியன் பட்டம் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெற்றி என ரோகித் சர்மா கேப்டன் பதவியில் கலக்கி வருகிறார்.
இந்த நிலையில் டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தினால் ரோகித் சர்மா ஒரு மாபெரும் சாதனையை சமன் செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா இதுவரை இந்திய அணியை 59 சர்வதேச t20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்தியிருக்கிறார். இதில் இந்திய அணி 47 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
இதன் மூலம் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் அதிக t20 போட்டிகளில் வெற்றியை பெற்ற கேப்டன் என்ற பாபர் அசாமின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்வார். பாபர் அசாம் இதுவரை 85 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு 48 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். ஆனால் ரோகித் சர்மா 59 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 47 வெற்றியை பெற்று இருக்கிறார்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உக்காந்தா கேப்டன் பிரயன் மசாபா, இங்கிலாந்தின் கேப்டனாக இருந்த ஏய்டன் மார்ககரம், ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஆஸ்கார் ஆப்கான் உள்ளனர். இதைப் போன்று ரோகித் சர்மா இன்னும் 73 ரன்கள் அடித்தால் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமின் ரன்களை முந்தி விடுவார். இதேபோன்று ரோகித் சர்மா இன்னும் ஐந்து சிக்ஸர்களை அடித்தால் சர்வதேச t20 கிரிக்கெட்டில் 200 சிக்சர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெறுவார்.