மும்பை: 2007ஆம் ஆண்டு நடந்த முதல் டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வென்ற போது நடந்த வெற்றிப் பேரணியின் போது ரோகித் சர்மா இளம் வீரராக பேருந்தில் நின்றார். தற்போது 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா திறந்தவெளி பேருந்தில் டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்தி நிற்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரை 2வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தோனி தலைமையில் களமிறங்கிய இளம் வீரர்கள் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி மிரட்டல் வெற்றியை பெற்றனர். இந்த டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின் இந்திய அணி வீரர்கள் திறந்தவெளி பேருந்தில் லட்சக்கணக்கான மக்களுக்கு நடுவே கொண்டாடினர்.

அப்போது திறந்தவெளி பேருந்தில் இளம் வீரராக ரோகித் சர்மா இருந்தார். தோனி, கம்பீர், சேவாக், ஹர்பஜன், யுவராஜ் சிங், ஆர்பி சிங் நடுவே ரோகித் சர்மாவை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. தற்போது 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா திறந்தவெளி பேருந்தில் வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பையை கையில் ஏந்தி நிற்கும் ரோகித் சர்மாவை காண்பதற்காகவே லட்சக்கணக்கான ரசிகர்கள் சாலைகளில் குவிந்துள்ளனர். 2007ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய அத்தனை வீரர்களும் ஓய்வை அறிவித்து வெளியேறிய நிலையில், 2வது டி20 உலகக்கோப்பையை வென்று ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் 2வது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற ஒரே வீரர் ரோகித் சர்மா தான். கடந்த முறை வெற்றிப் பேரணியில் கலந்துகொண்ட போது, யாருமே கண்டுகொள்ள இடத்தில் இருந்த ரோகித் சர்மா, இம்முறை சொந்த மண்ணில் திறந்தவெளி பேருந்தில் வரும் போது மும்பையே அதிர்கிறது.
சிறுவயதில் இருந்து விளையாடிய அதே வான்கடே மைதானத்தில் கேப்டனாக டி20 உலகக்கோப்பையை ஏந்தி ரோகித் சர்மா நிற்கப் போவது ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் 2007ல் மும்பையில் நடந்த வெற்றிப் பேரணி மற்றும் தற்போது நடக்கும் வெற்றிப் பேரணியின் புகைப்படங்களையும் ஒப்பிட்டு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.