மும்பை: 2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கடைசி ஓவர் கேட்ச் குறித்து கேப்டன் ரோஹித் சர்மா, மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தில் பேசியது பெரும் சிரிப்பலையை வரவழைத்தது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த நான்கு மகாராஷ்டிரா மாநில வீரர்களுக்கு அந்த மாநில சட்டமன்றத்தில் பாராட்டு விழா மற்றும் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ரோஹித் சர்மா, சிவம் துபே, ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய நால்வரும் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்று இருந்தனர். அவர்கள் நால்வருக்கும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அம்மாநில சட்டமன்றத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் குறித்து நகைச்சுவையாக பேசினார்.

2024 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது. அப்போது கடைசி ஓவரின் முதல் பந்தில் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மில்லர் சிக்ஸ் அடிக்க முயன்றார். பவுண்டரி எல்லையை கடக்க இருந்த அந்த பந்தை சூர்யகுமார் ஓடி வந்து லாவகமாக கேட்ச் பிடித்தார். ஓடி வந்த வேகத்தில் பவுண்டரி எல்லையை தாண்டி செல்ல வேண்டிய நிலையில் பந்தை மேலே தூக்கிப்போட்டு விட்டு, பின் பவுண்டரி எல்லைக்கே வெளியே சென்ற அவர், பின் மீண்டும் உள்ளே வந்து பந்தை கேட்ச் பிடித்தார். டேவிட் மில்லர் ஆட்டமிழந்ததால் தென்னாப்பிரிக்கா தோல்வி அடைந்தது. இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை வென்றது.
அது குறித்து பேசிய ரோஹித் சர்மா, "சூர்யகுமார் யாதவ் அந்த பந்து தன் கைகளில் வந்து அமர்ந்ததாக கூறினார். அந்த பந்து அவர் கைகளில் உட்காராமல் போயிருந்தால் அவரை வெளியே உட்கார வைத்து இருப்பேன்" என்று கூறினார் ரோஹித் சர்மா. எதுகை, மோனையுடன் ரோஹித் சர்மா பேசியதைக் கேட்டு மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர்கள் குலுங்கி, குலுங்கி சிரித்தனர். சூர்யகுமார் யாதவும் இதைக் கேட்டு சிரித்தபடி இருந்தார். பின்னர் இந்த நான்கு வீரர்களுக்கும் 11 கோடி பரிசு பணத்தை அளித்தார் மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே.