நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் ஆட உள்ளது. இந்தப் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், இந்திய ரசிகர்களை எச்சரித்து இருக்கிறார் கேப்டன் ரோஹித் சர்மா. போட்டியின் இடையே பிட்ச்களில் அத்துமீறி நுழைந்தால் அமெரிக்க காவல்துறையின் கடும் நடவடிக்கைக்கு ஆளாக வேண்டி இருக்கும் என அவர் கூறினார்.

முன்னதாக வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியின் போது ரோஹித் சர்மாவின் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அவர் ரோஹித் சர்மாவை நெருங்கி அவரை அணைத்தார். அப்போது நியூயார்க் நகர காவல் துறையை சேர்ந்த ஐந்து காவலர்கள் அவரை குண்டு கட்டாக தூக்கி தரையில் வீசினர். பின்னர் அவரது கைகளை பின்புறமாக மடக்கி, விலங்கு மாட்டினார்கள். ரோஹித் சர்மா அவரை விட்டு விடுமாறு கூறியும் அந்த காவலர்கள் அதை கண்டு கொள்ளவில்லை.
பின்னர் அந்த ரசிகரை கைது செய்து இழுத்துச் சென்றார்கள். அந்தக் காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைத்தது. இந்தியாவில் இது போல பல போட்டிகளில் நடந்தாலும் அத்துமீறும் நபர்களை இத்தனை மோசமாக நடத்த மாட்டார்கள். அமெரிக்காவில் சட்டம் கடுமையாக இருப்பதால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
அது மட்டும் இன்றி உலகக் கோப்பைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால் அமெரிக்காவில் இந்திய அணிக்கு கடுமையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. உச்சகட்டமாக ஸ்னைப்பர் வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருவேளை ரசிகர் யாராவது அத்துமீறி நுழைந்து தகாத செயல்களில் ஈடுபட்டால் அவர்களை சுட்டுத் தள்ளவும் கூட வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் முதல் போட்டிக்கு முன் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, "மைதானத்திற்குள் யாரும் வரக்கூடாது. வீரர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதுமட்டுமில்லை ரசிகர்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம். ஒரு நாட்டின் குறிப்பிட்ட விதிகளை நாம் மதிக்க வேண்டும்." என்று கூறினார். இதன் மூலம் அத்துமீறி நுழையும் எண்ணம் கொண்ட ரசிகர்களை ரோஹித் சர்மா எச்சரித்து இருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் குரூப் "ஏ"வில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, அயர்லாந்து அணிக்கு எதிராக தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது.