மும்பை : இந்திய டி20 அணியில் கடந்த ஆண்டு இடம் பெற்று இருந்த ருதுராஜ் கெய்க்வாட்டை 2024 டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப் போவதில்லை என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
2024 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் 2024 டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அந்த தொடருக்கான முதற்கட்ட இந்திய அணி இன்னும் இரண்டு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. உலகக்கோப்பை தொடருக்கு 15 வீரர்களை மட்டுமே அறிவிக்க முடியும் என்பதால் யார் யாரை இந்திய அணியில் தேர்வு செய்வது என்பதில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.

தற்போது நடந்து வரும் 2024 ஐபிஎல் தொடரில் குறைந்தது 25 இந்திய வீரர்கள் உலகக்கோப்பை அணியில் பங்கேற்கும் தகுதி பெற்ற வீரர்களாக உள்ளனர். அதிலும் இரண்டு துவக்க வீரர்கள் மற்றும் ஒரு மாற்று துவக்க வீரரை மட்டுமே அணியில் தேர்வு செய்ய முடியும் என்ற நிலையில் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா என ஆறு வீரர்கள் இடையே போட்டி நிலவுகிறது.
இதில் மூத்த வீரர் என்ற அடிப்படையில் விராட் கோலியும், கேப்டன் என்பதால் ரோஹித் சர்மாவும் முதல் நிலை துவக்க வீரராக தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஒரே ஒரு மாற்று துவக்க வீரர் இடத்துக்கு நான்கு வீரர்கள் முட்டி மோதி வருகின்றனர். இவர்களில் சுப்மன் கில் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்வார் என்பதால் அவரை அணியில் சேர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. சுப்மன் கில் தேர்வு செய்யப்படவில்லை என்றால் ஜெய்ஸ்வால் அணியில் தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
2024 ஐபிஎல் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு அணியில் இடம் கிடைக்காது என கூறப்படுகிறது. கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் சுப்மன் கில்லை அணியில் தேர்வு செய்ய விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.