டிரினிடாட் : டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 57 ரன்கள் மட்டுமே தென்னாப்பிரிக்கா அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. ஆஃப்கானிஸ்தான் அணி சீட்டுக்கட்டை போல் சரிவதற்கு, ரபாடா வீசிய ஒரேயொரு ஓவரே மிகமுக்கியமான காரணமாக அமைந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து ஆஃப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வலிமையான அணிகளை ஆஃப்கானிஸ்தான் வீழ்த்தி இருந்ததால், தென்னாப்பிரிக்கா அணிக்கு கடுமையான சவால் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதன்பின் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடர்ந்து மார்கோ யான்சன் வீசிய முதல் ஓவரிலேயே குர்பாஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் மீண்டும் யான்சன் வீசிய 3வது ஓவரில் குல்புதின் நயீர் 9 ரன்களில் ஆட்டமிழக்க, ஓமர்சாய் - ஜத்ரான் கூட்டணி களத்தில் இணைந்தது. இந்த நிலையில் 4வது ஓவரை வீசிய ரபாடா அழைக்கப்பட்டார். அவர் வீசிய முதல் பந்திலேயே நட்சத்திர வீரர் ஜத்ரான் ஸ்டம்புகள் சிதற போல்டாகி 2 ரன்களில் வெளியேறினார்.
இதன்பின் களம் புகுந்த முகமது நபியும், அதே ஓவரின் 4வது பந்தில் பறக்க போல்டாகி டக் அவுட்டில் வெளியேறினார். இந்த ஓவரில் ஒரு ரன் கூட கொடுக்காமல் ரபாடா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 20 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. மொத்தமாக 3 ஓவர்கள் வீசிய ரபாடா 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 13 டாட் பால்கள் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதுகுறித்து ரபாடா பேசுகையில், நாங்கள் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும் என்ற திட்டத்துடன் வந்தோம். தொடக்கத்திலேயே நல்ல ஸ்விங் கிடைத்தது. நாங்களும் சரியான லெந்தில் பவுலிங் செய்தோம். பாசிட்டிவ் கிரிக்கெட் விளையாடியதன் விளைவாக பார்க்கிறோம். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடினால், முக்கிய போட்டிகளில் பெரிதாக வித்தியாசம் எதுவும் காட்ட தேவையில்லை.
சில நேரங்களில் நாம் சிறப்பாக பவுலிங் செய்வோம், எந்த விக்கெட்டும் கிடைக்காது. சில போட்டிகள் மோசமாக பவுலிங் செய்த போதும், விக்கெட்டுகள் கிடைக்கும். இந்த தென்னாப்பிரிக்கா பக்கம் திரும்பியது மகிழ்ச்சி. இந்த தென்னாப்பிரிக்கா அணி நிச்சயம் உலகக்கோப்பையை வெல்வோம் என்று நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கை இல்லாமலா நாங்கள் இவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.