டிரினிடாட்: டி20 உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா அணியிடம் அடைந்த தோல்வியை ஏற்றுக் கொள்வதாக ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் தெரிவித்துள்ளார். இந்த டி20 உலகக்கோப்பையில் வேகப்பந்துவீச்சாளர்களின் செயல்பாடுகள் மற்றும் பவர் பிளே பவுலிங் மிகச்சிறந்த பாசிட்டிவாக அமைந்ததாக ரஷித் கான் கூறியுள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் அரையிறுதி போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்துள்ளது. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, வங்கதேசம் உள்ளிட்ட அணிகளை வீழ்த்தி பெரிய எதிர்பார்ப்புடன் அரையிறுதிக்கு வந்த ஆஃப்கானிஸ்தான் அணி, மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியடைந்திருக்கிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி வெறும் 56 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் இலக்கை எட்டி வென்றது. முழுமையாக 40 ஓவர்கள் நடக்க வேண்டிய ஆட்டம் வெறும் 21 ஓவர்கள் தான் நடந்துள்ளது. அதேபோல் 4 அணி நேரம் நடக்க வேண்டிய ஆட்டம், 2 மணி நேரத்தில் முடிவடைந்துள்ளது.
இந்த தோல்வி குறித்து ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் பேசுகையில், நிச்சயம் ஒரு அணியாக சோகமான முடிவு தான். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க முடியும். ஆனால் சூழல் எங்களை நன்றாக விளையாட அனுமதிக்கவில்லை. ஆனால் டி20 கிரிக்கெட்டில் எல்லாவிதமான சூழல் மற்றும் பிட்சிற்கும் தயாராக இருக்க வேண்டும். தென்னாப்பிரிக்கா அணி சிறப்பாக பவுலிங் செய்தனர். இந்த டி20 உலகக்கோப்பையில் எங்களின் வேகப்பந்துவீச்சு மிகச்சிறப்பாக அமைந்தது.
ஏனென்றால் டி20 கிரிக்கெட்டில் வெல்ல வேண்டுமென்றால், நல்ல தொடக்கம் வேண்டும். முஜீப் உர் ரஹ்மான் காயம் ஏமாற்றத்தை அளித்தாலும், பவர் பிளே ஓவர்களில் வேகப்பந்துவீச்சாளர்களுடன் இணைந்து முகமது நபி மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அதனால் தான் ஸ்பின்னர்களின் பணி எளிதாக இருந்தது. நிச்சயம் இந்த டி20 உலகக்கோப்பையை நாங்கள் மகிழ்ச்சியாக விளையாடினோம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இந்த அரையிறுதி சுற்றில் தோல்வியடைந்ததை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இது எங்களுக்கு நல்ல தொடக்கமாக நினைக்கிறேன். எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையும், மன உறுதியும் உள்ளது. நாங்கள் இதுவரை செய்ததை தொடர்ந்து செய்ய வேண்டும். இந்த டி20 உலகக்கோப்பையை ஒரு நம்பிக்கையாக எடுத்து கொள்கிறோம். எங்களிடம் திறமை உள்ளது என்று தெரியும். ஆனால் சூழல், சவால் மற்றும் அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டும். மிடில் ஆர்டரில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும். அடுத்தடுத்து பேட்டிங்கில் முன்னேற்றம் கண்டு நிச்சயம் கம்பேக் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.