கிங்ஸ்டவுன்: 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் வலுவான அணிகளில் ஒன்றான தென்னாப்பிரிக்காவுக்கு மரண பயத்தை காட்டியது கத்துக்குட்டி அணியான நேபாளம். கடைசி பந்தில் 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை சென்றது நேபாள அணி.
குரூப் டி பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் நேபாள அணி தோல்வியடைந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் என்ற நிலை இருந்தது. மறுபுறம் தென்னாப்பிரிக்கா அணி ஏற்கனவே தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தது.

இந்த நிலையில் இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் க்விண்டன் டிகாக் 10 ரன்களிலும், ஐடன் மார்க்கிரம் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து ஹென்ரிச் கிளாசன் 3, டேவிட் மில்லர் 7 ரன்களில் ஆட்டம் இழந்தனர். துவக்க வீரர் ரீஸா ஹென்ரிக்ஸ் 49 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார்.
கடைசி ஐந்து ஓவர்களில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடி ஆட்டம் ஆடினார். அவர் 18 பந்துகளில் 27 ரன்கள் சேர்த்தார். அவரது அதிரடி ஆட்டம் காரணமாகவே 100 ரன்களை கடந்த தென்னாப்பிரிக்கா அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. நேபாள அணியின் திபேந்திரா சிங் 3 விக்கெட்களும், குஷால் புர்டல் 4 விக்கெட்களும் வீழ்த்தி இருந்தனர்.
116 ரன்கள் என்ற எளிய இலக்கை சேஸிங் செய்தது நேபாளம். ஆனால், பிட்ச் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அந்த அணி திணறல் ஆட்டம் ஆடியது. துவக்க வீரர் ஆசிப் ஷேக் 49 பந்துகளில் 47 ரன்களும், நான்காம் வரிசை வீரர் அனில் சா 27 ரன்களும் சேர்த்தனர். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
கடைசி ஓவரில் எட்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு போட்டி சென்றது.நேபாள அணி வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், கடைசி ஓவரில் ஒரு ஃபோர் மற்றும் இரண்டு ரன்கள் எடுத்த குல்சன் ஷா கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் ரன் அவுட் ஆனார். இதை அடுத்து போட்டியில் ஒரு ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.
கத்துக்குட்டி அணியான நேபாளம் கடைசி பந்து வரை போட்டியை எடுத்து சென்று தென்னாப்பிரிக்காவுக்கு மரண பயத்தை காட்டியது. இந்த போட்டியின் தோல்வியால் நேபாள அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் கடைசி வாய்ப்பை இழந்தது.