நியூயார்க் : கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் சரியான வாய்ப்பு கிடைக்காமல் திண்டாடி வந்த சஞ்சு சாம்சனுக்கு முதல் முறையாக ஒரு பெரிய தொடரில் ஆட வாய்ப்பு கிடைத்தது. 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.
15 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் தான் அவருக்கு இடம் கிடைத்தது. இந்த நிலையில் அவர் போட்டிகளில் களமிறங்குவாரா? அல்லது "வாட்டர் பாயாக" மற்ற வீரர்களுக்கு தண்ணீர் கொடுக்க மட்டுமே பயன்படுத்தப்படுவாரா? என்ற சந்தேகம் அனைவருக்கும் இருந்தது.

இந்த நிலையில் தான் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சிப் போட்டியில் ஆட அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதிலும் துவக்க வீரராக களம் இறங்கினார் சஞ்சு சாம்சன். இதன் மூலம் அவரை மூன்றாம் வரிசையில் ஆட வைக்க ஒரு திட்டம் இருந்திருக்கலாம். ஆனால் தனக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறி விட்டார்.
அந்தப் போட்டியில் அவர் 6 பந்துகளில் ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். அவரால் பிட்ச்சை உடனடியாக கணித்து விளையாட முடியவில்லை. அவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதால் அவருக்கு போட்டியாளராக இருந்த ரிஷப் பண்ட் எப்படி விளையாடப் போகிறார்? என அனைவரும் கவனித்தனர். அதே போட்டியில் ரிஷப் பண்ட் மூன்றாம் வரிசையில் களமிறங்கி 32 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார்.
இதன் மூலம் சஞ்சு சாம்சனுக்கு விக்கெட் கீப்பராக களம் இறங்கும் வாய்ப்பும் பறிபோனது. சஞ்சு சாம்சன் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யார் சிறந்த விக்கெட் கீப்பர்? என்று கேட்டால் கண்டிப்பாக அனைவரும் ரிஷப் பண்ட்டை தான் தேர்வு செய்வார்கள். அந்த வகையிலும் சாம்சனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் போட்டிகளில் களமிறங்க வேண்டும் என்றால் இந்திய வீரர் யாருக்கேனும் காயம் ஏற்பட்டு ஆட முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே முடியும். சஞ்சு சாம்சன் டாப் ஆர்டர் மற்றும் மிடில் ஆர்டர் என எங்கு வேண்டுமானாலும் பேட்டிங் செய்வார் என்பது மட்டுமே அவருக்கு சாதகமான விஷயம்.