மும்பை : டி20 உலக கோப்பை தொடருக்கு சிறந்த முறையில் தாம் தயாராகி வந்திருப்பதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் செயல்பட்டார்.
15 இன்னிங்ஸில் விளையாடிய அவர் 531 ரன்கள் குவித்தார். இதில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 153 என்ற அளவில் இருந்தது. சஞ்சு சாம்சன் தன்னுடைய பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமையால் இந்திய அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

இந்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களம் இறங்கி சொதப்பினார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாம்சன், தமது கிரிக்கெட் வாழ்க்கையிலேயே ஒரு சிறந்த முறையில் தாம் தயாராகி அனுபவப்பட்டு வந்திருப்பது இந்த உலகக் கோப்பை தொடருக்கு மட்டும்தான்.
பல வெற்றி,தோல்விகளுக்கு பிறகு நான் இந்த கட்டத்திற்கு வந்திருக்கிறேன். என்னுடைய வாழ்க்கையும் கிரிக்கெட்டும் எனக்கு பல விஷயங்கள் கற்றுக் கொடுத்திருக்கிறது. அதோடு தான் இந்த முக்கியமான தொடருக்கு நான் வந்திருக்கிறேன். ஐபிஎல் தொடர் ஒன்றே என்னுடைய மனதளவில் ஆக்கிரமித்து, என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து எல்லாம் எனக்கு கற்றுத் தந்தது.
ஐபிஎல் விளையாடும் போது தேர்வு குழுவினர் என்னை கவனிப்பார்கள் என்று எனக்கு தெரியும். ஐபிஎல் தொடர் எனக்கு ஒரு வரப் பிரசாதமாக அமைந்தது. எனக்கு நல்ல வாய்ப்பை கொடுத்தது. நான் தொடர்ந்து விளையாடினேன். சில சமயம் எனக்கு அணியில் இடம் கிடைத்தது சில சமயம் கிடைக்காமல் போனது.
இதன் மூலம் இந்திய அணியில் இடம் பிடிப்பது எவ்வளவு கடினமான விஷயம் என்று எனக்கு தெரிந்தது. அணி நிர்வாகத்திற்கு என்ன தேவையோ அணியில் எந்தெந்த வீரர்கள் எந்த காம்பினேஷனில் இருக்க வேண்டும் என்பதெல்லாம் குறித்து தான் இடம் கிடைக்கும். என்னை பொறுத்தவரை நான் சரியான முறையில் தயாராக இருக்கிறேன். கிரிக்கெட்டும் வாழ்க்கையும் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.