நியூயார்க்: நம் அனைவருக்குமே வாழ்க்கையில் பிடித்த விஷயம் என்ற ஒன்று இருக்கும். ஆனால் வாழ்க்கையின் தேவைக்காக ஏதேனும் ஒரு அலுவலகத்தில் அமர்ந்து பணி செய்து கொண்டிருப்போம். இதனால் நமது கனவு நிஜமாகாமலேயே போய்விடும்.
இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சவுரப் நெத் ராவல்கர் தற்போது அமெரிக்காவில் ஐடி பணியில் இருந்து கொண்டே அமெரிக்க கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில் நெத்ராவல்கர் சிறப்பாக செயல்பட்டு அந்த அணியின் வெற்றிக்கு உதவி செய்திருக்கிறார்.

இந்த நிலையில் ஐடியில் பணிபுரிந்து கொண்டே கிரிக்கெட் விளையாடுகிறது எப்படி என்பது குறித்து சௌரப் நெத்ராவல்கர் நேற்று பேட்டி அளித்திருக்கிறார். அதில், கிரிக்கெட்டையும் அலுவலகப் பணியும் சேர்ந்து பார்ப்பதில் எனக்கு எந்த வித அழுத்தமும் நெருக்கடியும் ஏற்பட்டது இல்லை. ஒரு விஷயத்தை நீங்கள் விரும்பி செய்தால் அது உங்களுக்கு ஒரு வேலையாகவே தெரியாது.
எனவே நான் களத்தில் இருக்கும்போது பந்து வீசுவது மற்றும் பேட்ஸ்மேன்களை எப்படி ஆட்டம் இழக்க வைப்பது என்பது குறித்து யோசிக்க பிடிக்கும். இதே போல் நான் ஐடி பணியில் இருக்கும் போது எவ்வாறு கோடிங் செய்ய வேண்டும் என்பது குறித்து யோசிக்க பிடிக்கும். எனவே இது இரண்டையும் செய்யும் போது எனக்கு வேலை செய்கிறோம் என்ற எண்ணமே இருக்காது.
அது மட்டுமல்லாமல் என்னுடைய ஐ.டி தொழிலில் உரிமையாளர்கள் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார்கள். நான் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக செல்லும்போது என்னை அங்கிருந்து பணி செய்ய அனுமதிப்பார்கள். மேலும் போட்டி நாளன்று நான் பணி செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
ஆனால் ஏதேனும் மீட்டிங் இருந்தால் அதற்கு ஏற்றார் போல் என்னுடைய கிரிக்கெட் பயிற்சியை மாற்றிக் கொள்வேன். இந்த சமயத்தில் அமெரிக்க கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள். எனக்கு அலுவலக மீட்டிங் அதிகமாக இருந்தால் அதற்கு தகுந்தார் போல் என்னுடைய பயிற்சியை மாற்றி கொடுப்பார்கள். கிளப் கிரிக்கெட்டில் விளையாடும் போது கூட மதிய உணவு நேர இடைவெளியின் போது என் அலுவலகப் பணிக்காக நேரத்தை ஒதுக்கிட்டு அப்போது வேலை செய்வேன். நான் கிரிக்கெட் நன்றாக விளையாடுவேன் என்று என் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இதனால் அவர்கள் அனைவரும் எனக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்று நெத்ராவல்கர் கூறியுள்ளார்.