லாகூர்: டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்றிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறி இருப்பது தான் தற்போது மிகப்பெரிய பேசுப் பொருளாக மாறி இருக்கிறது. பாகிஸ்தான் அணியின் பல முன்னாள் வீரர்களும் இந்த நிலைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை என்று பலரும் கூறிவரும் நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி பாபர் அசாம் மீது பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை வைத்து இருக்கிறார்.

2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெளியேறியது. அதன் பிறகு பாபர் அசாம் அனைத்து விதமான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். அதன்பின் டி20 கேப்டனாக ஷாகின் ஆப்ரிடி நியமிக்கப்பட்டார். நியூசிலாந்துக்கு எதிரான ஒரு தொடரில் மட்டும் தான் கேப்டனாக இருந்தார். அதில் பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது.
இதன் பிறகு மீண்டும் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பாபர் அசாம் நியமிக்கப்பட்டார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஷாகித் அப்ரிடி, t20 போட்டியில் ஷாகினை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று நீங்களும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் முடிவெடுத்திருந்தால், அவர் டி20 உலக கோப்பை வரை கேப்டனாக இருந்திருக்க வேண்டும்.
பாபர் அசாம், ஷாகின் அப்ரிடிக்கு ஆதரவு அளித்திருக்க வேண்டும். மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கும் போது அதனை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் கேப்டனாக நியமித்திருக்கிறீர்கள். நாங்கள் அனைவரும் அவரது தலைமையில் களமிறங்கி விளையாடுவோம். ஷாகின் ஆப்ரிடி என்னுடன் நீண்ட காலமாக விளையாடி வருகிறார்.
தேர்வு குழுவினர் ஷாகின் அப்ரிடியை கேப்டனாக தேர்வு செய்திருந்தால், நாங்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளிப்போம் என்ற முடிவை பாபர் அசாம் எடுத்து இருக்க வேண்டும். இவ்வாறு பாபர் அசாம் செய்திருந்தால் அவர் மீதான நன்மதிப்பு அதிகரித்திருக்கும். ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்திற்கும் அவர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கி இருப்பார்.
ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்த நிலைக்கு பாபர் அசாம் மீது முழு குற்றச்சாட்டை நான் தெரிவிக்க மாட்டேன். இதற்கு தேர்வு குழுவும் தான் காரணம் சில தேர்வு குழு உறுப்பினர்கள் பாபர அசாம்க்கு கேப்டன்சியை செய்ய தெரியவில்லை என்று கூறி இருந்தார்கள். தற்போது அவரையும் மீண்டும் நியமித்திருக்கிறார்கள் என்று ஷாகித் ஆப்ரிடி குற்றம்சாட்டி உள்ளார்.