கராச்சி: இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவை பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி பாராட்டி தள்ளி இருக்கிறார். ஒரு தலைவன் எப்படி இருக்கிறானோ, அணியும் அப்படித்தான் இருக்கும் எனக் கூறி ரோஹித் சர்மாவை அவர் பாராட்டி இருக்கிறார். இதன் மூலம் மறைமுகமாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமை அவர் விமர்சனமும் செய்து இருக்கிறார்.
2024 டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் சுற்றுடன் வெளியேறியது. குரூப் சுற்றில் அமெரிக்கா மற்றும் இந்திய அணிகளிடம் அந்த அணி தோல்வி அடைந்ததால் சூப்பர் 8 முன்னேறும் வாய்ப்பை இழந்தது. மறுபுறம் இந்திய அணி குரூப் சுற்று, சூப்பர் 8 சுற்று மற்றும் அரை இறுதி என அனைத்து சுற்றுகளிலும் தான் ஆடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது. இது இந்திய அணியின் இரண்டாவது டி20 உலக கோப்பை வெற்றியாகும்.

இந்த வெற்றி குறித்து பேசிய ஷாஹித் அப்ரிடி ரோஹித் சர்மா அதிரடியாக ஆடியதால் தன்னம்பிக்கை பெற்ற பின்வரிசை பேட்ஸ்மேன்கள் அவரைப் போல அதிரடியாக ஆடியதாக கூறி இருக்கிறார். ரோஹித் சர்மா குறித்து ஷாஹித் அப்ரிடி பேசியது -
"ஒரு அணியில் ஒரு தலைவன் என்ன செய்கிறான் என்பது மிகவும் முக்கியம். அந்த தலைவனின் உடல் மொழி அந்த அணியின் உடல் மொழியாக மாறிவிடும். தலைவன் உதாரணமாக நடந்து கொள்ள வேண்டும். ரோஹித் சர்மாவையே நீங்கள் உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். ரோஹித் உடைய ஆட்டம் இப்போது எப்படி இருக்கிறது? அவர் அதிரடியாக ஆடுகிறார். அவரைப் பார்க்கும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள், கேப்டன் அதிரடியாக, ஆக்ரோஷமாக ஆடும் போது நாமும் அப்படி ஆடலாம் என்று தன்னம்பிக்கையை பெறுகிறார்கள். நான் எப்போதுமே ஒரு அணியில் கேப்டனின் செயல்பாடு முக்கியம் என்று கருதுவேன்" என்றார் ஷாஹித் அப்ரிடி.
இதன் மூலம் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் ஒரு நல்ல தலைவனாக நடந்து கொள்ளவில்லை, அவர் மிகவும் மந்தமாக பேட்டிங் ஆடுவதால் அதைப் பார்த்து மற்ற வீரர்களும் அதே போல நிதானமாக ரன் சேர்த்து வருகிறார்கள் என்பதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் ஷாஹித் அப்ரிடி.