நியூயார்க் : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ட்ரம்ப் கார்டாக சிஎஸ்கே அணி வீரர் இருப்பார் என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கணிப்பை வெளியிட்டுள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை அமெரிக்காவில் தொடங்கவுள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து ஜூன் 5ஆம் தேதி விளையாடவுள்ளது. அமெரிக்காவில் நடக்கும் லீக் போட்டிகளுக்கு பின், நாக் அவுட் போட்டிகள் அனைத்தும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடக்கவுள்ளது. இதனால் எந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் என்று பலரும் கணிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆலோசனை வழங்கியுள்ளார். அதில், என்னை பொறுத்தவரை நம்பர் 3 வரிசையில் விராட் கோலியை தான் விளையாட வைக்க வேண்டும். அவரின் பேட்டிங் வரிசையில் எந்த மாற்றத்தையும் செய்ய கூடாது. இந்திய அணியின் ரன் மெஷின் எப்போதும் விராட் கோலி தான். ஐபிஎல் தொடரிலேயே சிறந்த ஃபார்மில் இருந்தார்.
அதேபோல் ஜெய்ஸ்வாலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். தொடக்க வீரராக நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இளம் வீரராக இருப்பதால், ஜெய்ஸ்வால் கொஞ்சம் கூட அச்சமில்லாமல் பேட்டிங் செய்கிறார். அப்படியான ஒரு வீரர் தான் சிவம் துபே. இந்திய அணி நிர்வாகம் அவரை எப்படியாவது பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
ஏனென்றால் சிவம் துபேவிடம் இருக்கும் சிக்சர் அடிக்கும் திறமை அரிதானது. முன் காலத்தில் சிவம் துபேவை போல் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் இருந்தனர். இந்திய அணியின் ட்ரம்ப் கார்ட் சிவம் துபே தான். ஆனால் ஜெய்ஸ்வால் பிளேயிங் லெவனில் இருந்தால், நிச்சயம் ஒரு ஆல்ரவுண்டரை நாம் இழக்க வேண்டிய நிலை வரும்.
இதனால் கேப்டன் ரோகித் சர்மா தான் அந்த கடினமான முடிவை எடுக்க வேண்டும். ஏனென்றால் சிவம் துபே இருந்தால் கூடுதலாக 20 முதல் 30 ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் அசத்தல் ஃபார்மில் இருந்த சிவம் துபே, கடைசி நேரத்தில் ஃபார்மை இழந்து தவித்தது குறிப்பிடத்தக்கது.