மும்பை : இந்திய டி20 அணியில் நிரந்தர வீரராக மாறுவோம் என ஒரு மாதம் முன்பு வரை கனவு கண்டு வந்த ரிங்கு சிங் நிலை இப்போது பரிதாபமாக மாறி உள்ளது. தேர்வுக் குழுவினர் ரிங்கு சிங்கின் இடத்தில் சிவம் துபேவை தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட உள்ள நிலையில் அது குறித்து பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன. உலகக்கோப்பை தொடருக்கு 15 வீரர்களை மட்டுமே தேர்வு செய்ய முடியும் என்பதால் பல சிறந்த வீரர்களுக்கு கூட வாய்ப்பு கிடைக்காமல் போகக் கூடும் என கூறப்படுகிறது.

கடந்த ஓராண்டாக இந்திய டி20 அணியில் ஃபினிஷராக சிறப்பாக செயல்பட்டு வந்தார் ரிங்கு சிங். எந்த அழுத்தமான சூழ்நிலையிலும் அவர் அமைதியான மனநிலையில் இருப்பதை பலரும் பாராட்டினர். மேலும், அவர் சிறப்பாக ரன் குவித்தும் வந்தார்.
ஆனால், 2024 ஐபிஎல் தொடரில் எல்லாம் தலைகீழாக மாறி விட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 123 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதிகபட்சமாக 26 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 150 மட்டுமே. அதே சமயம் ரிங்கு சிங் போன்றே இடது கை பேட்ஸ்மேனான சிவம் துபே 9 போட்டிகளில் 350 ரன்கள் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 172 ஆக உள்ளது. மேலும், சிவம் துபே வேகப் பந்துவீச்சாளராகவும் செயல்படக் கூடியவர் என்பதால் இந்திய அணிக்கு அவரால் அதிக பலன்கள் உண்டு.
இவர்கள் இருவரையும் இந்திய அணியில் தேர்வு செய்ய முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா என ஆறு தவிர்க்க முடியாத வீரர்கள் இருக்கும் நிலையில் ரிங்கு சிங் அல்லது சிவம் துபே ஆகிய ஒருவருக்கு மட்டுமே அணியில் இடம் கிடைக்கும். அந்த வகையில் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் சிவம் துபேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.