நியூயார்க் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த சிவம் துபேவுக்கு எதிராக அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பேசியிருக்கிறார். இது சிஎஸ்கே ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிவம் துபே இடம் பெற்றுள்ளார். அவரை தொடர்ந்து இரண்டு போட்டிகளில் 11 வீரர்கள் கொண்ட அணியில் ஆட வைத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. ஆனால், சிலர் சிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர்.

சிவம் துபே வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்றாலும், அவரது பவுலிங்கை இந்திய அணி பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே உண்மை. ஏற்கனவே, அணியில் 6 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். ஏழாவது பந்துவீச்சாளராக மட்டுமே சிவம் துபே இடம் பெற்றுள்ளார். எனவே, இந்திய அணியில் அவருக்கான முக்கிய பொறுப்பு என்பது பேட்டிங் மட்டுமே. அதிலும் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.
ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் இருந்து அவர் மோசமாக பேட்டிங் ஆடி வருகிறார். அதிலும் முக்கியமான போட்டிகளில் அவர் பந்துகளை வீணடித்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறார். 2024 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியின் கடைசி லீக் போட்டியில் ஆர்சிபி அணியை வீழ்த்தினால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற நிலையில், சிவம் துபே 15 பந்துகளில் 7 ரன்கள் மட்டும் எடுத்து பெரும் ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து உலகக் கோப்பை பயிற்சிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக மற்ற பேட்ஸ்மேன்கள் எல்லாம் அதிரடி ஆட்டம் ஆடிய நிலையில் அவர் 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்து முக்கியமான இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் அவர் 9 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். இப்படி அவரது ஸ்ட்ரைக் ரேட் 100-ஐ கூட தாண்டாமல் உள்ளது.
இந்த நிலையில் அம்பத்தி ராயுடு பேசுகையில், "இந்திய அணியில் சிவம் துபேவுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை தான் ஆட வைக்க வேண்டும் என நான் உண்மையாகவே நினைக்கிறேன்" என்று கூறி இருக்கிறார். எப்போதும் சிஎஸ்கே வீரர்களுக்கு ஆதரவாக பேசும் அம்பத்தி ராயுடுவே சிவம் துபேவுக்கு எதிராக பேசி இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதை அடுத்து சிவம் துபேவை உடனடியாக அணியிலிருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் மீண்டும் கூறி வருகின்றனர்.