நியூயார்க் : இந்திய டி20 அணியில் இடம் பிடித்துள்ள சிவம் துபேவுக்கு டி20 உலகக் கோப்பை தொடரில் எந்த போட்டியிலும் விளையாட வாய்ப்பு அளிக்கப்படாது என இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
2024 டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது அதில் சிவம் துபே இடம் பெற்று இருந்தார். அதிலும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிரடியாக ஆடி தன்னை நிரூபித்த ரிங்கு சிங்கை நீக்கி விட்டு அவரது இடத்தில் சிவம் துபே இடம் பெற்றார். அதற்கு முக்கிய காரணம், சிவம் துபே 7வது ஓவரில் இருந்து 15வது ஓவர் வரை உள்ள மிடில் ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களை அடித்து ஆடுவார் என்பதுதான்.

அவரை இந்திய அணியில் தேர்வு செய்த போது கூட அனைவரும் அதை பாராட்டினர். ஆனால், அவரை அணியில் தேர்வு செய்த நாளில் இருந்து இதுவரை ஆறு டி20 போட்டிகளில் அவர் ஆடி இருக்கிறார். அந்த ஆறு போட்டிகளிலும் அவர் ஒட்டு மொத்தமாக 60 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதில் இரண்டு முறை தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி இருக்கிறார். இந்த ஆறு போட்டிகளில் அவரது பேட்டிங் சராசரி 10. அவரது ஸ்ட்ரைக் ரேட் 117 ஆகும்.
டி20 உலகக் கோப்பை அணிக்கு தேர்வு செய்யும் முன்பு வரை ஐபிஎல் தொடரில் அவர் 353 ரன்கள் குவித்து இருந்தார். அதன் பேட்டிங் சராசரி 59. அப்போது அவரது ஸ்ட்ரைக் ரேட் 174 ஆக இருந்தது. ஆனால், அதன் பின் அவரது ஃபார்ம் மோசமாக மாறியது.
உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நடந்த பயிற்சிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக அவர் 16 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். மற்ற வீரர்கள் எல்லாம் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடிய போது, இவர் மட்டும் பந்தை சரியாக அடிக்க முடியாமல் திணறினார். இத்தனைக்கும் இவருக்கு சுழற் பந்துவீச்சாளர்களே அதிகம் பந்து வீசினார்கள்.
இவரது இந்த நிலைக்கு என்ன காரணம்? சிவம் துபே ஃபார்ம் இழந்து விட்டார் என்றே முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். ஒரு நாள் போட்டி அல்லது டெஸ்ட் போட்டிகளில் ஒரு வீரர் ஃபார்ம் இழந்து விட்டால், தங்களுக்கு சாதகமாக உள்ள ஒரு போட்டியில் சில பந்துகளை சந்தித்து தன்னம்பிக்கை பெற்ற பின் அதிரடியாக ஆடி தங்கள் ஃபார்மை மீட்பார்கள். இதற்காக அவர்கள் சில போட்டிகளை வீணடிப்பார்கள். ஆனால், ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டிகளில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது.
ஆனால், டி20 போட்டிகளை பொறுத்தவரை ஒவ்வொரு பந்திலும் ரன் குவிக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. எனவே, டி20 போட்டிகளில் இருந்து ஒரு வீரர் ஃபார்மை மீட்பது மிகவும் கடினம். ஒவ்வொரு போட்டியிலும் கடுமையான அழுத்தம் இருக்கும். அதை தாண்டி அவர் தனது ஃபார்மை மீட்க வேண்டும். அதிலும் உலகக் கோப்பை போன்ற முக்கியமான தொடரில் ஃபார்ம் இழந்த வீரருக்கு அணியில் வாய்ப்பு கொடுப்பது என்பது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம்.
எனவே, சிவம் துபே இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் பெறுவது சந்தேகம் தான். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அதை செய்ய மாட்டார் என்று கூறப்படுகிறது. ரிஷப் அண்ட், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் மிடில் ஆர்டரில் அபாரமாக அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர்கள் என்பதால் சிவம் துபேவுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்.